ADVERTISEMENT

துபாய் மெட்ரோ ப்ளூ லைன் திட்டம்: 5 மாதங்களில் முடிக்கப்பட்ட 10% பணிகள்..

Published: 9 Nov 2025, 2:27 PM |
Updated: 9 Nov 2025, 2:28 PM |
Posted By: admin

துபாய் போக்குவரத்தின் முதுகெலும்பாக இருக்கும் மெட்ரோவில் ஏற்கெனவே ரெட் லைன், கிரீன் லைன் என இரண்டு வழித்தடங்கள் இருக்கும் நிலையில் மூன்றாவதாக ப்ளூ லைன் வழித்தடம் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் துபாய் மெட்ரோ ப்ளூ லைன் பணிகள் தொடங்கிய ஐந்து மாதங்களுக்குள் 10 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் 30 சதவீதத்தை எட்டும் என்றும் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அத்துடன் இந்த திட்டத்தை வரும் 9/9/2029 க்குள் முடிக்க 12 இடங்களில் 3,000 தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், பல்வேறு சமூகங்களின் குடியிருப்பு, தொழில்துறை மற்றும் பொருளாதார பகுதிகளுக்கு சேவை செய்வதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவரும், இயக்குநர் ஜெனரலுமான மட்டார் அல் தாயர், கடந்த ஜூன் 2025 இல் துபாய் மெட்ரோ ப்ளூ லைனுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்ற ஐந்து மாதங்களுக்குப் பிறகு இந்த மைல்கல் எட்டப்பட்டதாகக் கூறியுள்ளார். மேலும் துபாயின் முக்கிய குடியிருப்பு, கல்வி, பொருளாதாரம் மற்றும் சுற்றுலா பகுதிகளை இணைக்கும் உலகத்தரம் வாய்ந்த சேவையை வழங்கவும் முன்னேற்றத்தை விரைவுபடுத்தவும் 12 தளங்களில் 500க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் நிபுணர்கள், 3,000 தொழிலாளர்கள் தற்போது பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

துபாய் மெட்ரோ ப்ளூ லைன் என்பது 14 நிலையங்களை உள்ளடக்கிய 30 கி.மீ. திட்டமாகும். இது இரண்டு திசைகளில் நீண்டுள்ளது. முதலாவது அல் ஜடாஃபில் உள்ள கிரீன் லைனில் உள்ள க்ரீக் இன்டர்சேஞ்ச் நிலையத்தில் தொடங்கி துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி, துபாய் க்ரீக் ஹார்பர் மற்றும் ராஸ் அல் கோர் இண்டஸ்ட்ரியல் ஏரியா வழியாகச் சென்று, அண்டர்கிரவுண்டில் உள்ள இன்டர்சேஞ்ச் நிலையத்தை உள்ளடக்கிய இன்டர்சேஞ்ச் ஸ்டேஷன் உட்பட இன்டர்நேஷனல் சிட்டியை (1) அடைகிறது. பின்னர் இது இன்டர்நேஷனல் சிட்டி (2) மற்றும் (3), துபாய் சிலிக்கான் ஒயாசிஸ் வழியாகத் தொடர்கிறது மற்றும் துபாய் அகாடமிக் சிட்டியில் முடிகிறது. இந்தப் பிரிவு 21 கி.மீ. நீளமானது மற்றும் 10 நிலையங்களைக் கொண்டுள்ளது.

இரண்டாவது திசை அல் ரஷிதியாவில் உள்ள ரெட் லைனில் உள்ள சென்டர்பாயிண்ட் இன்டர்சேஞ்ச் நிலையத்திலிருந்து தொடங்கி, மிர்திஃப் மற்றும் அல் வர்கா வழியாகச் சென்று, இன்டர்நேஷனல் சிட்டி (1) இல் உள்ள இன்டர்சேஞ்ச் நிலையத்துடன் இணைக்கிறது. இந்தப் பிரிவு 9 கிமீ நீளம் கொண்டது மற்றும் நான்கு நிலையங்களை உள்ளடக்கியது. இந்த திட்டம் அல் ருவையா 3 இல் ஒரு டிப்போ மற்றும் பராமரிப்பு வசதியையும் கொண்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து தெரிவிக்கையில் “துபாய் மெட்ரோவின் ரெட் மற்றும் கிரீன் லைன்களை இணைக்கும் இந்த பாதை, 2040 ஆம் ஆண்டுக்குள் சுமார் ஒரு மில்லியன் குடியிருப்பாளர்களை தங்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் பகுதிகளுக்கு சேவை செய்கிறது. இது துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு 20 நிமிடங்களில் நேரடி பயணங்களையும் வழங்கும்,” என்று அல் தாயர் கூறியுள்ளார். இது குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவசிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என்றும், பயணத்தின் 20 நிமிடங்களுக்குள் 80 சதவீதத்திற்கும் அதிகமான அத்தியாவசிய சேவைகளை அணுக உதவும் ’20 நிமிட நகரம்’ என்ற கருத்தை உணர வைக்கும் என்றும் கூறினார்.

அதுமட்டுமல்லாமல் இந்த திட்டத்தில் பணிபுரிந்து வரும் பொறியியல் குழுக்கள் தங்கள் பணிகளை வேகமாக மேற்கொண்டு வருவதாக அல் தாயர் தெரிவித்துள்ளார். பல தளங்களில் 260 க்கும் மேற்பட்ட ஆழமான அடித்தளங்கள் முடிக்கப்பட்டுள்ளன என்றும், இன்டர்நேஷனல் சிட்டி (1), (2) மற்றும் (3) ஆகிய இடங்களில் உள்ள நிலைய இடங்களில் 400,000 கன மீட்டருக்கும் அதிகமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் விளக்கியுள்ளார்.

அகாடமிக் நகரப் பகுதியில் பல நிலைய தூண்களும், இன்டர்நேஷனல் சிட்டி (1) போன்ற பெரும்பாலான அண்டர்கிரவுண்ட் நிலையங்களில் தடுப்புச் சுவர்களும் கட்டப்பட்டுள்ளன. இந்த மேம்பாடுகள் மெட்ரோ பணிகளை விரிவுபடுத்தவும், அடுத்தடுத்த கட்டுமான கட்டங்களில் முன்னேற்றத்தை துரிதப்படுத்தவும் உதவும் என கூறப்படுகின்றது. மேலும் ப்ளூ லைன் திட்ட கூட்டமைப்பு பல்வேறு இடங்களில் எந்த இறப்புகளையும் பதிவு செய்யாமல் 3 மில்லியனுக்கும் அதிகமான வேலை நேரங்களை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel