துபாயின் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும், துபாய் நிர்வாகக் குழுவின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், வியாழக்கிழமை துபாயின் சில பகுதிகளிலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் பிற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தபோது, உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவின் நுனியில் மின்னல் தாக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அதில் புர்ஜ் கலீஃபா மேகமூட்டமான வானத்தின் மத்தியில் இருப்பதையும், மின்னல் தாக்குவதையும் வீடியோ காட்டுகிறது. வரவிருக்கும் மழை நாட்களுக்கு குடியிருப்பாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று இளவரசர் மற்றொரு பதிவைப் பகிர்ந்து கொண்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.
தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) படி, ஐக்கிய அரபு அமீரகம் இன்று, வியாழக்கிழமை, டிசம்பர் 18 அன்று ‘அல் பஷாயர்’ என்ற குறைந்த அழுத்த அமைப்பின் உச்சத்தை அடைகிறது. ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமாவின் சில பகுதிகளில் ஏற்கனவே இன்று காலை பலத்த மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்து வரும் நிலையில், தீவிரமான மழை அபுதாபி மற்றும் துபாய் முழுவதும் இன்று தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவிக்கையில், “செங்கடலில் இருந்து உருவாகும் மேற்பரப்பு குறைந்த அழுத்த அமைப்பின் நீட்டிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் நிலையற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்னல், இடியுடன் கூடிய பல்வேறு தீவிர மழை பெய்யும், மேலும் குறிப்பிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று NCM இன்று ஒரு எச்சரிக்கையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.