அபுதாபியில் தனது மூன்று சகோதரர்களையும் குடும்பத்தில் வீட்டு வேலை பார்த்து வந்த நபரையும் கொன்ற ஒரு பயங்கரமான கார் விபத்தில் படுகாயமடைந்த ஏழு வயது சிறுவன் இன்று (திங்கள்கிழமை) மாலை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஞாயிற்றுக்கிழமை நடந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அபுதாபி-துபாய் சாலையில் உள்ள ஷஹாமா பகுதி அருகே அவர்கள் சென்று கொண்டிருந்த வாகனம் விபத்துக்குள்ளாகி இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகின்றது. கேரளாவைச் சேர்ந்த இவர்கள் தனது குடும்பத்தினருடன், அபுதாபியில் நடைபெற்று வரும் லிவா ஃபெஸ்டிவலில் கலந்து கொண்டு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த வேளையில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விபத்தில் மூன்று சிறுவர்களும் அவர்களது வீட்டு வேலைக்காரரும் இறந்தனர் என்றும், குழந்தைகளின் பெற்றோர் மற்றும் அவர்களின் மற்ற இரண்டு குழந்தைகளும் பலத்த காயமடைந்தனர் என்றும் கூறப்பட்டது. அதில் ஒரு மகன் உயிருக்குப் போராடி வருவதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்த குடும்பத்தை ஆதரிக்கும் ஒரு சமூக சேவகர், இறந்தவர்களை அப்துல் லத்தீப் மற்றும் அவரது மனைவி ருக்சானா ஆகியோரின் குழந்தைகளான ஆஷாஸ் (14), அம்மார் (12) மற்றும் அயாஷ் (5) மற்றும் அந்த குடும்பத்தில் வீட்டு வேலை செய்து வரும் புஷ்ரா ஆகிய நால்வரும் உயிரிழந்து விட்டதாக அடையாளம் தெரிவித்திருந்தார்.
மேலும் உயிர் பிழைத்த அப்துல் லத்தீஃப், ருக்சானா மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் எஸ்ஸா (வயது 10) அஸ்ஸாம் (7) ஆகியோர் அபுதாபியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து தெரிவிக்கையில் “இந்த விபத்து அதிகாலை நடந்தது. அதன் பிறகு குடும்பத்தின் பல உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். குழந்தைகளை ஐக்கிய அரபு அமீரகத்திலேயே அடக்கம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இறுதிச் சடங்கிற்கான நடைமுறைகள் மற்றும் வீட்டில் வேலை பார்த்தவரின் உடலை தாய்நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடைமுறைகளுக்கு நாங்கள் அவர்களுக்கு ஆதரவளித்து வருகிறோம்,” என்று சமூக சேவகர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அபுதாபியில் உள்ள ஒரு மருத்துவமனையில், இந்தியர்களான அப்துல் லத்தீப் மற்றும் ருக்ஸானாவின் உயிர் பிழைத்த இரண்டு குழந்தைகளில் ஒருவரான அஸ்ஸாம், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நடந்த விபத்திலிருந்து உயிருக்குப் போராடி வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் என்று தெரிவிகப்பட்டுள்ளது.
குடும்பமாக உற்சாகத்துடன் சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழித்து விட்டு வரும் வழியில் ஏற்பட்ட விபத்தால் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தினரையும் நண்பர்களையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.