அமீரகத்தின் பல பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் கோர் ஃபக்கானின் அல் ஸுபாரா பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில், மழையால் ஏற்பட்ட நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட 15 வயது அரபு சிறுவன் ஒருவன் காயமின்றி மீட்கப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.
கோர் ஃபக்கான் குடிமைப் பாதுகாப்பு அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தச் சம்பவம் நேற்று (மார்ச் 26) மாலை சுமார் 4.20 மணியளவில் நிகழ்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளத்தாக்கில் உள்ள ஒரு ஓடைக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த அந்தச் சிறுவன், வழுக்கி ஓடையில் உள்ள தண்ணீரில் விழுந்ததாக கூறப்படுகின்றது.
வேகமாகச் செல்லும் நீரோட்டம் அவனை வெகுதூரம் அடித்துச் சென்றது என்றும் பின்னர், அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதியில் உள்ள மரங்களுக்கு இடையில் அவன் சிக்கிக்கொண்டான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின் மீட்புக் குழுக்கள் வரும் வரை, மரங்கள் அவனது இயக்கத்தை மெதுவாக்கி, நிலைமை மோசமடைவதைத் தடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தகவல் கிடைத்தவுடன் அவசர மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, விரைவான மற்றும் பாதுகாப்பான மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர் என கூறப்பட்டுள்ளது.