கடந்த பிப்ரவரி 28 ம் தேதியன்று அமெரிக்க, இஸ்ரேல் ஒன்று சேர்ந்து கூட்டாக ஈரானை தாக்கியதை தொடர்ந்து தற்பொழுது ஒரு மாதத்திற்கும் மேலாக போர் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. ஈரான் வளைகுடா நாடுகள் மீது தினம்தோறும் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
அமீரகத்தை பொறுத்தவரை தாக்குதல்கள் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டாலும் அவ்வப்போது ஏவுகணையின் சிதறிய பாகங்கள் விழுந்து விபத்தையும் பொருள் அல்லது உயிர்சேதத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.
அதில் நள்ளிரவு துபாயின் அல் பதா பகுதியில் வான் பாதுகாப்பு இடைமறிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட சிதறல்களால், அல் பதாவில் உள்ள ஒரு பழைய வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக துபாய் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால் வீட்டின் சுற்றுவட்டாரத்தில் இருந்த நான்கு நபர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் ஷார்ஜாவின் துரையா தொலைத்தொடர்பு நிறுவனம் திங்களன்று ஈரானிய ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு உள்ளானது என கூறப்பட்டுள்ளது.
ஷார்ஜாவில் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள அந்நிறுவனத்தின் நிர்வாகக் கட்டிடத்தின் மீதான இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும், அதிகாரிகள் தற்போது இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொதுமக்கள் அதிகாரிகள் வெளியிடும் தகவல்களை நம்புமாறும், போலி செய்திகள் அல்லது வதந்திகளை பரப்பவோ அல்லது நம்பவோ வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது..