மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில், அமீரகம் நியாயமற்ற தாக்குதல்களை எதிர்கொண்டாலும், ஈரானுக்கு எதிரான எந்தவொரு தாக்குதலிலும் பங்கேற்கப் போவதில்லை என்று ஐக்கிய அரபு அமீரகம் தெளிவுபடுத்தியுள்ளது. இது குறித்து தெரிவிக்கையில், தெஹ்ரான் மீதான தாக்குதல்களுக்கான ஏவுதளமாக அதன் பிரதேசம் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளது.
ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய அரபு அமீரக தூதரும் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற சர்வதேச அமைப்புகளுக்கான நிரந்தர பிரதிநிதியுமான ஜமால் அல் முஷாரக், ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமீரக தளங்கள் பயன்படுத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
“எங்கள் பிரதேசத்திலிருந்து ஈரானுக்கு எதிரான எந்தவொரு தாக்குதலிலும் ஐக்கிய அரபு அமீரகம் பங்கேற்காது, அல்லது அத்தகைய மோதலில் நாங்கள் ஈடுபட மாட்டோம் என்பதில் தாக்குதலுக்கு முன்னும் தாக்குதலுக்கு பின்னும் நாங்கள் மிகத் தெளிவாக இருக்கிறோம்” என தெரிவித்துளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதலைத் தணிக்க ஐக்கிய அரபு அமீரகத்தின் அழைப்பை அல் முஷாரக் மீண்டும் புதுப்பித்து, பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்ப வலியுறுத்தியுள்ளார். பதற்றத்தை குறைப்பதே எங்கள் நிலையான நிலைப்பாடு, அதற்காக நாங்கள் தொடர்ந்து வாதிடுவோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.
உப்புநீக்கும் ஆலைகள் மற்றும் எரிசக்தி மையங்கள் (desalination plants and energy facilities) உட்பட ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பொதுமக்கள் உள்கட்டமைப்பை குறிவைத்து நடத்தப்பட்ட ஈரானிய தாக்குதல்கள் கவலைக்குரியவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று தூதர் தெரிவித்துள்ளார். இந்த முக்கிய இடங்களைப் பாதுகாக்க நாடு முழுமையாகத் தயாராக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அண்டை நாடுகள் மீதான இந்த தாக்குதல்கள் கொள்கைகளை மீறுவதாகவும், அமைதியான தீர்வுகளைக் கண்டறிவதற்கான முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.