மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றங்களின் காரணமாக, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அனைத்து வாரியத் தேர்வுகளையும் (board exam) ரத்து செய்வதாக இந்திய கல்வி வாரியம் CBSE ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) அறிவித்துள்ளது.
அதாவது மார்ச் 16 முதல் ஏப்ரல் 10 வரை 12 ஆம் வகுப்புக்கான அனைத்து தேர்வுகளும் பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு ரத்து செய்யப்படும் என்று ஒரு சுற்றறிக்கையில் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஒத்திவைக்கப்பட்ட முந்தைய தேர்வுகளும் ரத்து செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்த நாடுகளில் 12 ஆம் வகுப்பு முடிவுகளை அறிவிக்கும் முறையை சரியான நேரத்தில் அறிவிப்பதாக வாரியம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.
முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகம் உட்பட பல மத்திய கிழக்கு நாடுகளில் 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளை ஒத்திவைப்பதாக CBSE கூறியிருந்தது. இந்நிலையில் தற்போதைய பிராந்திய மோதல் மற்றும் மாணவர் நல்வாழ்வு குறித்த கவலைகளை மறுபரிசீலனை செய்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது என கூறப்பட்டுள்ளது.
வாரியத்தின் கூற்றுப்படி, நடந்து வரும் அமெரிக்க,இஸ்ரேல்-ஈரான் போர் மற்றும் மாணவர்கள் தேர்வுகளுக்குத் தயாராகும் போது எதிர்கொள்ளும் மன வேதனை மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றின் முக்கிய மதிப்பாய்வுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது என கூறப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் தங்கள் பள்ளியுடன் தொடர்பில் இருக்குமாறும் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.