ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்ததால் ஏற்பட்ட சிதறல்கள் விழுந்ததன் காரணமாக அபுதாபியின் ஹப்ஷான் (habshan) எரிவாயு நிலையங்களிலும், பாப் எரிவாயு தளத்திலும் (Bab field) ஏற்பட்ட சம்பவங்களுக்கு அபுதாபி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களின் விளைவாக எரிவாயு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என்றும், மேலும் எந்த காயங்களும் பதிவாகவில்லை என்றும் அபுதாபி ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பொதுமக்கள் அதிகாரப்பூர்வமான மூலங்களிலிருந்து மட்டுமே தகவல்களைப் பெறுமாறும், வதந்திகள் அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
முன்னதாக தனது சொந்த எரிசக்தித் துறை மீண்டும் பாதிக்கப்பட்டால், அமெரிக்க நட்பு நாடுகளாக இருக்கும் தனது அண்டை நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் தளங்களை அழித்துவிடுவோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
மேலும் “இஸ்லாமியக் குடியரசின் எரிசக்தி உள்கட்டமைப்பைத் தாக்கியதன் மூலம் நீங்கள் ஒரு பெரிய தவறைச் செய்துவிட்டீர்கள் என்று நாங்கள் மீண்டும் ஒருமுறை உங்களை எச்சரிக்கிறோம், அதற்கான பதிலடி செயல்படுத்தப்பட்டு வருகிறது,” என்று இரானின் புரட்சிகரக் காவல்படை ஈரானிய ஊடகங்கள் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தது.
அத்துடன் “இது மீண்டும் மீண்டும் செய்யப்பட்டால், உங்கள் மற்றும் உங்கள் கூட்டாளிகளின் எரிசக்தி உள்கட்டமைப்பு முற்றிலும் அழிக்கப்படும் வரை அதன் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது, மேலும் எங்கள் பதிலடி இன்றிரவு நடந்த தாக்குதல்களை விட மிகவும் கடுமையாக இருக்கும்” எனவும் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.