கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஈரான் வளைகுடா நாடுகளில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இன்று (வியாழக்கிழமை) துபாயில் ஷேக் சையத் சாலையில் உள்ள ஒரு கட்டிட முகப்பில் ட்ரோன் இடைமறிப்பின் போது உடைந்த பாகங்கள் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தால் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் சம்பந்தப்பட்ட குழுக்கள் நிலைமையைக் கையாண்டு சம்பவத்தை மதிப்பிட்டு வருகின்றன எனவும் கூறப்பட்டுள்ளது.
இதே போன்று இன்று அதிகாலை, துபாய் க்ரீக் துறைமுகத்திற்கு அருகிலுள்ள ஒரு கட்டிடத்தின் மீது ட்ரோன் விழுந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர், இதனால் அந்த கட்டிடத்தில் ஒரு சிறிய தீ விபத்து ஏற்பட்டது, பின்னர் அது விரைவாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
துபாய் ஊடக அலுவலகத்தின்படி, சிவில் பாதுகாப்பு குழுக்கள் விரைவாகச் செயல்பட்டு தீயைக் கட்டுப்படுத்தின என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக கட்டிடத்தில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களும் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டதாகவும் இதனால் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
அதிகாரிகள் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதால், சரிபார்க்கப்பட்ட புதுப்பிப்புகளுக்கு அதிகாரப்பூர்வ ஆதாரங்களைப் பின்பற்றுமாறு குடியிருப்பாளர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.