ஈத் அல் ஃபித்ர் பண்டிகையின் போது, குடும்பங்களும் குடியிருப்பாளர்களும் நகரத்தின் மலர் தோட்டமான மிராக்கிள் கார்டனிற்கு படையெடுத்து வருவதால், கட்டுக்கடங்காத கூட்டத்தின் காரணமாக துபாய் மிராக்கிள் கார்டன் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
“எங்கள் பார்வையாளர்களின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதி செய்வதற்காக” இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இதனால் ஏற்படும் சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்ததோடு, நிலைமையைப் புரிந்துகொள்ளுமாறு பொதுமக்களையும் கேட்டுக்கொண்டனர்.
முன்னெப்போதும் இல்லாத கவனத்தை ஈர்த்துள்ள ஒரு சிறப்பு முயற்சியின் ஒரு பகுதியாக இந்த மூடல் நிகழ்ந்துள்ளது. அதில் மார்ச் 15 முதல் 31 வரை, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள், செல்லுபடியாகும் எமிரேட்ஸ் அடையாள அட்டையைக் காண்பிப்பதன் மூலம் இந்த மிராக்கிள் கார்டனிற்கு இலவசமாக நுழைய அழைக்கப்பட்டனர்.
தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் இந்தச் சலுகை, ஈத் பண்டிகைக்கு முன்னதாக குடும்பங்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் ஓய்வெடுக்கவும், தரமான நேரத்தை அனுபவிக்கவும் ஒரு வாய்ப்பை வழங்கும் வகையில் இது அமைக்கப்பட்டிருந்தது.
முன்னதாக, பார்வையாளர்களுக்கு முன்பதிவு தேவையில்லை என்றும், பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை என்றும், திடீர் வருகைகளை ஊக்குவிக்கும் வகையில் அதிகாரிகள் கூறியிருந்தனர். இருப்பினும், பார்வையாளர்களின் வருகை எதிர்பார்ப்புகளை மீறியதால், இந்தத் தற்காலிக நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பிரபலமான சுற்றுலாத் தலமான துபாய் மிராக்கிள் கார்டனில், அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மார்ச் 21 முதல் தனது இலவச நுழைவுக் கொள்கையை நிர்வாகம் புதுப்பித்துள்ளது. கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதையும், பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதையும் இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் வருகை காரணமாக இலவச நுழைவுச் சலுகை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக இதன் அதிகாரி ஒருவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதற்குப் பதிலாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள், செல்லுபடியாகும் எமிரேட்ஸ் அடையாள அட்டையைக் காண்பிப்பதன் மூலம், மதிப்புக்கூட்டு வரி (VAT) உட்பட 52.50 திர்ஹம்ஸ் என்ற தள்ளுபடி விலையில் டிக்கெட்டைப் பெறலாம்.
முன்னதாக, குடியிருப்பாளர்களுக்கான வழக்கமான டிக்கெட் விலை மதிப்புக்கூட்டு வரி (VAT) உட்பட 73.50 திர்ஹம்ஸாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஈத் பண்டிகைக் காலத்தை உள்ளடக்கி, மார்ச் 31 வரை இந்தத் தள்ளுபடி விலை நடைமுறையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இந்தப் பருவம் முடியும் வரை தொடர்ந்து இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள். இது குடும்பங்கள் குறைந்த செலவில் இந்த சுற்றுலாத் தலத்தைப் பார்வையிட வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.