பாதுகாப்புக் காரணங்களுக்காக, 2026 ஆம் ஆண்டு ஈத் அல் ஃபித்ர் தொழுகையை மசூதிகளில் மட்டுமே நடத்த ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்துள்ளது என அமீரகத்தின் இஸ்லாமிய விவகாரங்கள், அறக்கட்டளைகள் மற்றும் ஜகாத் பொது ஆணையம் அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் ஈத் தொழுகை நடத்தப்படும் மைதானங்கள் அல்லது திறந்தவெளிப் பகுதிகளில் மக்கள் கூடுவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும், தொழுகைகள் மசூதிகளில் மட்டுமே நடைபெறும் என்றும் அந்த ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாடு எடுத்துள்ள நடவடிக்கைகளுடன் இந்த நடவடிக்கை ஒத்துப்போகிறது என்றும் ஆணையம் கூறியுள்ளது.
துபாயில் உள்ள இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டுப் பணிகள் துறையும், ஷார்ஜாவில் உள்ள இஸ்லாமிய விவகாரங்கள் துறையும் இந்த முடிவை எடுப்பதற்காக அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளன என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் தொழுபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, மசூதிகளில் ஈத் தொழுகையை நிறைவேற்ற அவர்கள் முன்கூட்டியே வருமாறு அந்த ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பிறை பார்க்கும் குழு, ரமலான் மாதத்தின் 29 ஆம் நாளான இன்று (மார்ச் 18, புதன்கிழமை) ஷவ்வால் பிறையை பார்க்க கூடும். பிறை தென்பட்டால், மார்ச் 19, வியாழக்கிழமை அன்று ஈத் அல் ஃபித்ர் தொடங்கும். தென்படவில்லை என்றால், ரமலான் 30 நாட்களை நிறைவு செய்து, மார்ச் 20, வெள்ளிக்கிழமை அன்று ஈத் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய வானியல் கணக்கீடுகளின்படி, இந்த ஆண்டு ரமலான் முழு 30 நாட்களும் நீடிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.