அமீரகத்தை தொடர்ந்து நான்காவது நாளாக ஈரான் தாக்கி வரும் நிலையில் ட்ரோன் தாக்குதலை இடைமறித்ததன் விளைவாக உடைந்த பாகங்கள் ஃபுஜைரா எண்ணெய் தொழில்துறை மண்டலத்தில் (FOIZ) விழுந்து தீ விபத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஒரு ட்ரோனை வெற்றிகரமாக இடைமறித்ததைத் தொடர்ந்து அதன் பாகங்கள் கீழே விழுந்ததில், தீ விபத்து ஏற்பட்டதாக கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து ஃபுஜைரா அரசாங்கத்தின் ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, பின்னர் அப்பகுதியில் வழக்கமான நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஃபுஜைரா அதிகாரிகள் பொதுமக்களை அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து தகவல்களைப் பெறவும், வதந்திகள் அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்கவும் வலியுறுத்தியுள்ளனர்.
மத்திய கிழக்கு முழுவதும் பதட்டங்கள் அதிகரித்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் உட்பட பல நாடுகள் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ள நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சமீபத்திய நாட்களில் வான் பாதுகாப்பு அமைப்புகள் தாக்குதல்களை முறியடித்துள்ளன. இதன் மூலம் அபாயங்களை நிவர்த்தி செய்வதில் நாட்டின் பாதுகாப்பு உள்கட்டமைப்பின் செயல்திறன் மற்றும் தயார்நிலையை இந்த நடவடிக்கைகள் நிரூபிக்கின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.