ஃபுஜைராவில் உள்ள அதிகாரிகள், வான் பாதுகாப்புப் படையினரால் இடைமறிக்கப்பட்ட ட்ரோனில் இருந்து வந்த உடைந்த பாகங்களால் ஃபுஜைரா பெட்ரோலியம் தொழில்துறை மண்டலத்தில் (FIZ) ஏற்பட்ட தீயை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளனர்.
இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த அவசரகால குழுக்களை ஃபுஜைரா பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஹமாத் அல் ஷர்கி இன்று (வெள்ளிக்கிழமை) பார்வையிட்டு உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பதில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பணியாளர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
பட்டத்து இளவரசரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்ட படங்கள், அவர் அந்த இடத்திற்கு வருகை தந்ததைக் காட்டியது, அங்கு அவர் சிவில் பாதுகாப்பு குழுக்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்து மீட்பு முயற்சிகள் குறித்து விளக்கத்தைப் பெற்றார்.
படங்களுடன் கூடிய பதிவில், அவசரகால பதிலளிப்பவர்களின் அர்ப்பணிப்பை ஷேக் முகமது பாராட்டினார். வாராந்திர வெள்ளிக்கிழமை தொழுகைக்காக மசூதிகளில் பல குடியிருப்பாளர்கள் கூடியிருந்தபோதும், அவர்களின் இந்த அயராத உழைப்பிற்காக அவர்களை ‘ஹீரோக்கள்’ என்று பாராட்டியுள்ளார்.
அதில் “இந்த ஆசீர்வதிக்கப்பட்ட வெள்ளிக்கிழமையில், மசூதிகளில் பிரார்த்தனை செய்ய மக்கள் கூட்டம் கூடும் போது, இந்த ஹீரோக்கள் மக்கள் மற்றும் நிலத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தரையில் தங்கள் பணியிலும் அர்ப்பணிப்பிலும் விடாமுயற்சியுடன் உள்ளனர்,” என்று அவர் பகிர்ந்துள்ளார்.
அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதன் மூலம், எமிரேட்டில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதில் அவர்களின் பணியின் முக்கியத்துவத்தை பட்டத்து இளவரசர் எடுத்துரைத்துள்ளார்.
இந்த தீயைக் கட்டுப்படுத்த அவசரகால மீட்புக் குழுக்கள் 24 மணி நேரமும் உழைத்தன என்றும், இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சரியான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ ஆதாரங்களை நம்பியிருக்கவும், வதந்திகள் அல்லது சரிபார்க்கப்படாத அறிக்கைகளைப் பரப்புவதைத் தவிர்க்கவும் அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
அதே போல் அபுதாபி எரிசக்தித் துறை, எமிரேட்டின் பெட்ரோலிய சேமிப்பு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து தளங்கள் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
இதற்காக பிரத்யேக குழுக்கள் அடிக்கடி ஆய்வுகளை மேற்கொள்கின்றன என்றும், முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் அவசரகால பணிநிறுத்தங்களைச் சரிபார்க்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது., மேலும் அனைத்து பாதுகாப்பு விதிகளும் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.