ஐக்கிய அரபு அமீரகம் கடந்த ஒரு சில தினங்களாக கனமழையை அனுபவித்து வரும் பட்சத்தில் ஏற்கெனவே வானிலை மையம் அறிவித்ததை போன்று வரும், மார்ச் 28, சனிக்கிழமை வரை அமீரகம் நிலையற்ற வானிலை மற்றும் அடுத்தடுத்த அலைகளாக கனமழையைத் தொடர்ந்து அனுபவிக்கும் என கூறப்பட்டுள்ளது. தற்பொழுது பல்வேறு கட்டங்களாக மழை பெய்து வரும் நிலையில் நாளை (வியாழன்) வானிலை எப்படி இருக்கும் என்ற கணிப்பையும் வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
வியாழன் மாலை–வெள்ளி: இறுதி அலை முதலில் அமீரகத்தின் மேற்குப் பகுதிகளைத் தாக்கி, அல் தஃப்ரா, அபுதாபி வழியாக நகர்ந்து, பின்னர் வடக்கு, கிழக்குப் பகுதிகள் மற்றும் அல் அய்ன் வரை பரவும். கனமழை, மின்னல், இடி மற்றும் ஆங்காங்கே ஆலங்கட்டி மழை எதிர்பார்க்கப்படுகிறது, வெள்ளிக்கிழமை இரவுக்குள் மேகமூட்டம் குறையும்.
சனிக்கிழமை: வானம் படிப்படியாகத் தெளிவடையும், வடமேற்குக் காற்று தீவிரமாகவும் வலுவாகவும் வீசும், வெப்பநிலை குறையும், மேலும் தூசி மற்றும் மணல் காற்று பார்வைத்திறனைக் குறைக்க வாய்ப்புள்ளது.
கடல் நிலவரம்: அரேபிய வளைகுடா மற்றும் ஓமான் கடல் ஆகிய இரண்டிலும் கடல் சீற்றமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமீரகத்தில் பெய்து வரும் தொடர்மழையால் பல்வேறு சாலைகளில் நீர் தேங்கியுள்ளன. மலைப்பகுதிகளில் பல சாலைகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக வாகனம் ஓட்டுனரும் பள்ளத்தாக்கு பகுதிகளை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ஷார்ஜா விமான நிலையமும் தற்போதையை வானிலை காரணத்தால் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதால் பயணிகள் தங்களின் விமான நிலையை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.