ஈரான் மீதான தாக்குதலை தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அசாதாரண சூழ்நிலையின் காரணமாக, அமீரக விமான நிலைய அதிகாரிகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதனையடுத்து, துபாய் மற்றும் பிற ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள விமான நிலையங்களுக்கான சிறப்பு விமான நடவடிக்கைகளை இந்திய விமான நிறுவனங்கள் குறைத்துள்ளன.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, இந்தியாவிலிருந்து துபாய்க்குச் செல்லும் மற்றும் துபாயிலிருந்து இந்தியாவிற்கு புறப்படும் விமானங்களின் பயண அட்டவணைகள், கட்டுப்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் குறைந்த கட்டண விமான நிறுவனமான இண்டிகோ தெரிவித்துள்ளது.
“மத்திய கிழக்கில் உருவாகி வரும் சூழ்நிலை காரணமாக, துபாயில் விமான நடவடிக்கைகள் மேலும் தடைசெய்யப்பட்டுள்ளன, இதனால் விமான அட்டவணைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன” என்று இண்டிகோ விமான நிறுவனம் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒரு பயண ஆலோசனையில் கூறியுள்ளது. எனவே விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன்பு பயணிகள் தங்கள் விமான நிலையை சரிபார்க்க வேண்டும் என்றும் இண்டிகோ வலியுறுத்தியுள்ளது.
அதேபோன்று, ஐக்கிய அரபு அமீரக விமான நிலைய அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து, மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை தங்களின் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களின் சேவைகளை கணிசமாகக் குறைக்க வேண்டியிருந்ததாக ஏர் இந்தியா குழுமமும் உறுதிப்படுத்தியுள்ளது.
அதாவது, ஏர் இந்தியா விமான நிறுவனம் தனது டெல்லி-துபாய் திரும்பும் விமானத்தை மட்டுமே இயக்கும் என்றும், துபாய்க்கு திட்டமிடப்பட்ட ஐந்து சேவைகளில் நான்கு ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளது. இதனிடையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதன் ஆறு துபாய் விமானங்களில் ஐந்தை ரத்து செய்துள்ளதாகவ்வும், டெல்லி-துபாய் திரும்பும் சேவையை மட்டுமே இயக்குவதாகவும் கூறியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் மற்றொரு தனியார் விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக துபாய்க்கு செல்லும் மற்றும் புறப்படும் விமானங்களை கட்டுப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த முடிவானது அமீரக விமான நிலைய அதிகாரிகளின் அறிவுறுத்தலை தொடர்ந்து எடுக்கப்பட்டதாகவும் ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது.
மேலும், பயண மாற்றங்கள் குறித்த அறிவிப்பை பயணிகளின் பதிவுசெய்யப்பட்ட தொடர்பு விபரங்களுக்கு எஸ்எம்எஸ்/மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துவதாகவும், பயணிகள் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் தங்கள் விமான நிலையைச் சரிபார்க்குமாறும் ஸ்பைஸ்ஜெட் கேட்டுக் கொண்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel