ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக அண்டை நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன் உட்பட மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க விமானப் படை தளங்களை குறிவைத்து ஈரான் எதிர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதன் காரணமாக அண்டை நாடுகளும் உயிர் சேதம், பொருட்சேதம் என கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், ‘அண்டை நாடுகளுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை’ என ஈரான் நாட்டின் ஜனாதிபதி வீடியோ காணொளி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பழிவாங்குவது என்பது “அண்டை நாடுகளுடன் பிரச்சினை” என்று அர்த்தமல்ல என்றும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் இன்று ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அண்டை நாடுகள் மீதான தாக்குதல் குறித்து தான் கூறிய கருத்துக்கள் “அண்டை நாடுகளுடன் பிளவை விதைக்க முயலும் எதிரியால் (அமெரிக்கா) தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது” என்று அரசு தொலைக்காட்சியில் ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் தெரிவித்துள்ளார்.
மேலும், “நாங்கள் சகோதரர்கள் என்றும் அண்டை நாடுகளுடன் நல்லுறவைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் பலமுறை கூறப்பட்டுள்ளது. இருப்பினும், தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம், ஆனால் இது ஒரு (அண்டை) நாட்டோடு எங்களுக்கு தகராறு இருப்பதாகவோ அல்லது அவர்களின் மக்களை வருத்தப்படுத்த விரும்புவதாகவோ அர்த்தமல்ல” என்றும் பெஷேஷ்கியன் விளக்கமளித்துள்ளார்.
இதற்கு முன்பாக அண்டை நாடுகள் மீதான தாக்குதலுக்கு மன்னிப்பு கூறுவதாகவும், அந்த நாடுகளில் இருந்து தாக்குதல் நடத்தப்படாவிட்டால் எதிர் தாக்குதல் நடத்தப்படாது என்றும் அவர் தெரவித்திருந்தார். இதற்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் தோல்வியடைந்து விட்டதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் “ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஆயுதப் படைகள் (Iran Revolutionary Guards) தற்போதைய நடவடிக்கைகளின் வேகத்தில் குறைந்தது 6 மாத கால தீவிரப் போரை தொடரும் திறன் கொண்டவை” என்று காவல் படையின் செய்தித் தொடர்பாளர் அலி முகமது நைனி கூறியதாக ஃபார்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel