ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய பயங்கர தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயாதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்திருந்த நிலையில், தற்போது அவர் உயிரிழந்து விட்டதாக ஈரானின் தேசிய ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது. உச்ச தலைவரின் மரணத்தை தொடர்ந்து ஈரான் முழுவதும் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் தேசிய ஊடகம் தெரிவித்துள்ளது.
ஈரான் நாட்டில் இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் அதன் அமைப்பின் தூணாக இருந்து வந்தவர் ஈரானின் உச்சத் தலைவர் அயாதுல்லா அலி கமேனி ஆவார். இவர், பல தசாப்தங்களாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளால் பல நெருக்கடிகளுக்கு ஆளாக்கப்பட்டார். மேலும் தற்போது மரணிக்கும் வரையிலும் அமெரிக்காவின் கொள்கைகளுக்கு அவர் எதிராகவே இருந்தார்.
இஸ்லாமிய கட்சியின் புரட்சிகர நிறுவனர் அயதுல்லா ருஹோல்லா காமேனியின் மரணத்தைத் தொடர்ந்து, 1989 இல் இஸ்லாமியக் குடியரசின் தலைவராக அயாதுல்லா அலி காமெனி பதவியேற்றதலிருந்து வாழ்நாள் முழுவதும் கடந்த மூன்றரை தசாப்தங்களாக ஈரானை ஆதிக்கம் செலுத்தி வந்தார். இந்நிலையில் இன்று நள்ளிரவில் நடத்தப்பட்ட தீவிர தாக்குதலில் தனது 86 வயதில் அவர் கொல்லப்பட்டுள்ளார்.
ஜூன் மாதம் இஸ்ரேலுக்கு எதிரான 12 நாள் போரின் போது காமெனி தலைமறைவாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது இஸ்லாமிய குடியரசின் மீது இஸ்ரேலிய உளவுத்துறையின் ஆழமான ஊடுருவலை அம்பலப்படுத்தியது. இதன் விளைவாக ஈரானின் முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். எனினும் அவர் தலைமறைவானதன் காரணமாக அந்தப் போரிலிருந்து உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.