மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், அமீரகம் உட்பட வளைகுடா நாடுகளில் விமான சேவை பாதிப்பால் சிக்கித் தவிக்கும் பயணிகளை திருப்பி அனுப்ப சிறப்பு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. ஐக்கிய அரபு அமீரகமும் தனது நாட்டில் சிக்கியுள்ள சுற்றுலா பயணிகளை சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க குறிப்பிட்ட விமான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் ஐக்கிய அரபு அமீ்கத்தில் சிக்கித் தவித்த கிட்டத்தட்ட 7,000 இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் திரும்பியுள்ளனர். அரபு பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட விமான நடவடிக்கைகளுக்கு மத்தியில் இந்த சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இன்று அபுதாபியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதர் டாக்டர் தீபக் மிட்டல் மற்றும் துபாயில் உள்ள தூதர் ஜெனரல் ஸ்ரீ சதீஷ் சிவன் ஆகியோர் விமான நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து, சிக்கித் தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் முயற்சியை ஆய்வு செய்து விரைவான நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.
அப்போது, அமீரக விமான நிலையங்களில் திட்டமிடப்படாத விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த 48 மணி நேரத்தில் அபுதாபி, துபாய், ராஸ் அல் கைமா, ஷார்ஜா மற்றும் ஃபுஜைராவிலிருந்து அதிக விமானங்கள் புறப்பட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் விமான நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளது.
எனினிம், இந்த சிறப்பு நடவடிக்கைகளின் வேகம், அமீரக வான்வெளி பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் விமானப் போக்குவரத்து அதிகாரிகளின் அனுமதிகளைப் பொறுத்தது எனவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அமீரகத்தில் இன்றும் வான்வெளி தாக்குதல் தொடர்ந்து வருவதால் பாதுகாப்பு நடவடுக்கைகளை பொருத்து விமான சேவைகள் உறுதிப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் பிற முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel