மோசமான வானிலை மற்றும் சாலைகளில் நீர் தேங்கியிருப்பதன் காரணமாக, ஷார்ஜா மற்றும் அஜ்மானுக்கான பேருந்து சேவைகள் இன்று (மார்ச் 26, வியாழக்கிழமை) இரவு 7 மணி முதல் தற்காலிகமாக நிறுத்தப்படும் என துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பில் “சேவைகளை விரைவில் மீண்டும் தொடங்குவதற்காக, எங்கள் குழுக்கள் தற்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. சேவை மீண்டும் தொடங்குவது குறித்த கூடுதல் தகவல்களுக்கு, எங்கள் சமூக ஊடக சேனல்களைப் பின்தொடரவும். உங்கள் புரிதலுக்கும் ஒத்துழைப்பிற்கும் நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்” என்று RTA கூறியுள்ளது.
அமீரகத்தில் கடந்த சில தினங்களாகவே மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் பல்வேறு சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தும் மழைநீர் தேங்கியும் காணப்படுகின்றது. இதனால் வாகன ஓட்டுனர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது மட்டுமல்லாமல் சில சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்கியுள்ளபடியால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையின் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் அமீரகத்தில் பெய்து வரும் இந்த கனமழையானது நாளை (வெள்ளி) வரை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.