எதிஹாட் ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், துபாயின் எமிரேட்ஸ் சாலையை நோக்கிய மலிஹா சாலையிலிருந்து எக்ஸிட் பாதையானது, இரண்டு மாதங்களுக்கு ஒவ்வொரு வார இறுதியிலும் மூடப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்த மூடல் ஏப்ரல் 4, சனிக்கிழமை இரவு 11 மணிக்குத் தொடங்கி, ஜூன் 1, திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. பணிகள் நிறைவடைந்ததும், எதிஹாட் ரயில் நாடு முழுவதும் இணைப்பை மேம்படுத்துவதோடு, ஐக்கிய அரபு அமீரகத்தை மற்ற வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகளுடன் இணைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி எல்லையில் உள்ள அல் குவைஃபத் நிலையத்தையும் அபுதாபியில் உள்ள அல் ஃபயா நிலையத்தையும் இணைக்கும் வழித்தடத்தில், தனது சோதனை ஓட்டங்களின் ஒரு பகுதியாக எதிஹாட் ரயில் ஒரு பயணிகள் ரயிலை முன்னதாகவே கடந்த மார்ச் 3 அன்று இயக்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு நிலையங்களுக்கு இடையேயான இணைப்பு, முக்கிய துறைமுகங்களுக்குச் சென்று வருவதற்கான தடையற்ற போக்குவரத்திற்கு உதவுவதோடு, நாட்டினர் மற்றும் குடியிருப்பாளர்கள் இருவரின் நடமாட்டத்தையும் எளிதாக்குகிறது என கூறப்பட்டிருந்தது.
மேலும் பிராந்திய மோதலுக்கு மத்தியில், மார்ச் 4 அன்று, குவைஃபத் நிலையத்திலிருந்து அபுதாபி நகரில் உள்ள அல் ஃபயா நிலையத்திற்கு ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் திரும்புவதை எளிதாக்கும் வகையில், எதிஹாட் ரயில் ஒரு சிறப்பு மூன்று பயணிகள் ரயில் சேவைகளை இயக்கியது. வான்வெளி மூடப்பட்டதால் விமானங்கள் தொடர்ந்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இந்தச் சேவைகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும் .