ஐக்கிய அரபு அமீரகமானது மே 4, 2026 அன்று, ஈரானிலிருந்து ஏவப்பட்ட 12 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 3 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 4 ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளது. இதில், 3 பேர் மிதமான காயங்களுக்கு உள்ளானதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 9 அன்று அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் மோதலில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு, தற்பொழுது மீண்டும் முதன்முறையாக ஈரானிய ஏவுகணைகள் கண்டறியப்பட்டதால், மே 4 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் அவசரகால எச்சரிக்கை அமைப்பு செயல்படுத்தப்பட்டது.
நேற்று முன்னதாக ஹோர்முஸ் நீரிணையில் adnoc எண்ணெய்க்கப்பல் மீது ஈரான் தாக்குதலை நடத்தியிருந்தது. அத்துடன் நேற்றைய தாக்குதல்களின் விளைவாக ஃபுஜைரா பெட்ரோலிய தொழில்துறை மண்டலத்தில் (FOIZ) தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக 3 இந்தியர்கள் காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து ஐக்கிய அரபு அமீரகம் மீதான ஈரானின் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து, வான் பாதுகாப்புப் படைகள் இதுவரை 549 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 29 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 2,260 ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளன.
இதனால், காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 227 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் எமிராட்டி, எகிப்திய, சூடானிய, எத்தியோப்பிய, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தானிய, ஈரானிய, இந்திய, பங்களாதேஷிய, இலங்கை, அஜர்பைஜானிய, யேமன், உகாண்டா, எரித்திரிய, லெபனான், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், கொமோரியா, துருக்கி, ஈராக், நேபாளம், நைஜீரியா, ஓமன், ஜோர்டான், பாலஸ்தீனிய, கானா, இந்தோனேசியா, ஸ்வீடன், துனிசியா, மொராக்கோ மற்றும் ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்நிலையில் எந்தவொரு அச்சுறுத்தல்களையும் சமாளிக்கவும், நாட்டின் பாதுகாப்பைக் குலைக்கும் அனைத்து முயற்சிகளையும் உறுதியாக எதிர்கொள்ளவும், நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையைப் பேணுவதையும், அதன் நலன்களையும் தேசியத் திறன்களையும் உறுதி செய்யவும் பாதுகாப்பு அமைச்சகம் உயர் எச்சரிக்கை நிலையில் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.