ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகை தந்திருந்த 51 வயதான இந்தியர் ஒருவர், மீண்டும் இந்தியா திரும்புவதற்கு விமானத்தில் பயணம் செய்யவிருந்த நிலையில் திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த திங்கள்கிழமை அதிகாலை அபுதாபியிலிருந்து பெங்களூரு செல்லும் விமானத்தில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உயிரிழந்த நபருக்கு மனைவி மற்றும் ஐந்து குழந்தைகள் (இதில் மூன்று மாதக் குழந்தையும் அடங்கும்) இருப்பதாகக் கூறப்படுகிறது.
கேரளாவைச் சேர்ந்த யூசுப் குன்ஹம்மு (Yousafe Kunhammu) என அடையாளம் காணப்பட்ட இவர், சுற்றுலா விசாவில் அமீரகத்திற்கு வந்திருந்த நிலையில், தனது பயணத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்பிக்கொண்டிருந்த போது விமானம் புறப்படுவதற்குச் சற்று முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினரும் விமான நிறுவன வட்டாரங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.
அபுதாபியில் வசிக்கும் அவரது மருமகன் கூறுகையில், மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், யூசுப் மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
விமானம் புறப்படுவதற்குச் சற்று முன்பு அந்தப் பயணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக விமான நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன. விமானப் பணிக்குழுவினர் உடனடியாகச் செயல்பட்டு விமானிக்குத் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, அந்த விமானி அவசர மருத்துவ உதவியைக் கோரியுள்ளார்.
அதன் பிறகு, மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து விமானத்திற்குள்ளேயே பாதிக்கப்பட்டவருக்கு அவசர சிகிச்சையை அளித்துள்ளனர், பின்னர் யூசுப் அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
விமானப் போக்குவரத்து நடைமுறைகளின்படி, அப்பயணியின் உடைமைகள் விமானத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன, இதனால் விமானம் புறப்படுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டதாக விமானப் பணிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
யூசுப் கேரளாவைச் சேர்ந்தவர் என்றாலும், அவர் பெங்களூரு செல்லும் பயணத்தையே முன்பதிவு செய்திருந்ததாகக் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
இந்தத் திடீர் துயரச் சம்பவம் அமீரகம் மற்றும் இந்தியாவில் உள்ள உறவினர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் வணிக வாய்ப்புகளைத் தேடி யூசுப் கடந்த காலங்களில் பலமுறை அமீரகத்திற்குப் பயணம் செய்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவரின் உயிரிழப்பு குறித்த செய்தி கிடைத்ததும், பல்வேறு அமீரகப் பகுதிகளில் வசிக்கும் அவரது உறவினர்கள் அபுதாபிக்கு விரைந்தனர். அவரது உடல் தற்போது பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், உடலைக் கேரளாவுக்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளைக் குடும்பத்தினரும் சமூகப் பிரதிநிதிகளும் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
அமீரகத்தில் இந்தியர்கள் சம்பந்தப்பட்ட சமீபத்திய சம்பவங்களின் வரிசையில் யூசுப்பின் மரணமும் நிகழ்ந்துள்ளது. சமீபத்தில் தான், அமீரகத்தில் வசிக்கும் இரண்டு இந்தியர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் அஜ்மானில் பேட்மிண்டன் விளையாடிய பிறகு மயங்கி விழுந்து இறந்த 43 வயதான கேரளாவைச் சேர்ந்தவர்.
மற்றொருவர் துபாயில் கிரிக்கெட் விளையாடும்போது உயிரிழந்த 38 வயதான கர்நாடகாவைச் சேர்ந்தவர் ஆவார். சமீபத்திய இந்த தொடர் சம்பவங்கள் திடீர் இதய அவசரநிலைகள் குறித்த கவலைகளை மீண்டும் ஒருமுறை முன்னிலைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel