ADVERTISEMENT

அமீரகத்தில் வாட்டர் கூலரைத் தொட்டபோது மின்சாரம் தாக்கி சிறுவன் பலி!!

Published: 28 Aug 2026, 12:29 PM |
Updated: 28 Aug 2026, 12:29 PM |
Posted By: Menaka

அமீரகத்தில் உள்ள அல் அய்ன் நகரில் பூங்காவிற்கு அருகில் இருந்த வாட்டர் கூலரைத் தொட்டபோது மின்சாரம் தாக்கியதில் எட்டு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

அரபு நாட்டைச் சேர்ந்த வலீத் காலத் (Walid Khaled) என்ற அந்தச் சிறுவன், புதிய கல்வி ஆண்டில் பள்ளிக்குச் செல்ல மிகுந்த ஆர்வத்துடன் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். வலீத் தனது பள்ளிப் பை மற்றும் எழுதுபொருட்களைத் தயார் செய்து வைத்திருந்ததுடன், விளையாட்டுக்கான சீருடை வாங்குவதற்கும் ஆயத்தமாகி வந்ததாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆனால், தனது வீட்டிற்கு அருகிலுள்ள பூங்காவில் ஒன்பது வயது சகோதரன் மற்றும் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, ​இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ADVERTISEMENT

என்ன நடந்தது?

குடும்பத்தினர் தெரிவிக்கும் தகவலின்படி, குழந்தைகள் அடிக்கடி தண்ணீர் குடிக்கப் பயன்படுத்தும் அந்த வாட்டர் கூலரை நோக்கி முதலில் ஒரு சிறுவன் சென்றுள்ளார். அதைத் தொட்டவுடன் திடீரென அந்தச் சிறுவன் கீழே சரிந்து விழுந்ததாக வலீத்தின் சகோதரன் தெரிவித்துள்ளார்.

வலீத்தின் சகோதரன் அகமது, அந்தச் சிறுவனைத் தொட்டபோது தனக்கும் மின்சாரம் பாய்வது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும், உடனடியாகத் தனது கையை விலக்கிக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இதையடுத்து, தனது நண்பனுக்கு ஏதோ நேர்ந்துவிட்டது என்று நினைத்த வலீத், அருகில் சென்று அந்த வாட்டர் கூலரைத் தொட்டுப் பார்த்துள்ளார். அப்போது வலீத்தும் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்துள்ளார்.

இச்சம்பவத்தை நேரில் கண்ட அகமது பதற்றத்துடன் வீட்டிற்கு ஓடிச் சென்று தனது பெற்றோரிடம் விவரத்தைக் கூறியுள்ளார். குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது, ​​வலீத் சுயநினைவின்றி கிடப்பதைக் கண்டனர்.

உடனடியாக, அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், வலீத் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பள்ளிச் சமூகம் இரங்கல்

இந்தத் துயரச் சம்பவம் வலீத்தின் குடும்பத்தினர், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பள்ளி நிர்வாகத்தினர் உயிரிழந்த மாணவரை பண்பான மற்றும் நல்ல உள்ளம் கொண்ட சிறுவன் என்றும், சக மாணவர்களால் பெரிதும் விரும்பப்பட்டவன் என்றும் வர்ணித்ததுடன், அவனது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களுக்குத் தங்கள் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.

பூங்காக்கள் மற்றும் குழந்தைகள் விளையாடும் பிற பகுதிகளில் பழுதான மின்சாதனங்கள், சேதமடைந்த வயரிங் மற்றும் முறையாகப் பராமரிக்கப்படாத உபகரணங்களால் ஏற்படும் தீவிர ஆபத்துகளையும் இச்சம்பவம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

மேலும், வெளிப்புறங்களில் வைக்கப்படும் மின்சாதனங்களை முறையாகப் பொருத்த வேண்டும், அவற்றை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் மற்றும் குழந்தைகள் அணுக முடியாதவாறு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதை இத்துயரச் சம்பவம் குடும்பங்களுக்கு நினைவூட்டுகிறது.