ஐக்கிய அரபு அமீரக அதிபராக பதவி வகித்த மாண்புமிகு ஷேக் கலீஃபா அவர்களின் மறைவையொட்டி சவூதி அரேபியாவின் மக்கா மற்றும் மதீனாவில் உள்ள இரண்டு புனித மசூதிகளில் இறுதி தொழுகை நடத்தப்பட்டது.
இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலரும் சவூதி அரேபியாவின் மன்னருமான சல்மான் பின் அப்துல் அஜீஸ் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் மறைந்த ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களுக்காக நேற்று மஹ்ரிப் தொழுகைக்குப் பின் நடத்தப்பட்ட இறுதி தொழுகையில் ஏராளமான குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் கலந்து கொண்டனர். அதில் மறைந்த அதிபருக்கு சொர்க்கத்தில் அமைதி கிடைக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் அனைவரும் பிரார்த்தனை செய்தனர்.
மேலும் சவூதி அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னர் சல்மான் மற்றும் இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமைக்கும், அரசுக்கும், மக்களுக்கும் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, இந்த மாபெரும் இழப்பிற்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தனர் என்றும் ஷேக் கலீஃபாவுக்கு அமைதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் ஐக்கிய அரபு அமீரக மக்களுக்கும் பொறுமை மற்றும் ஆறுதல் வழங்கட்டும் என்றும் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.