ஓமான்: அரசு விதித்த அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கம்..!! உச்சக்குழு அறிவிப்பு..!!
ஓமானில் கொரோனா வைரஸ் தொடர்பான நிலவரங்களைக் கையாளும் உச்சக் குழு, அனைத்து இடங்களிலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நீக்க முடிவு செய்துள்ளதாக ஓமன் செய்தி நிறுவனம் (ONA) தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் சமூக உறுப்பினர்கள் தடுப்பு சுகாதார நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும், காய்ச்சல் அல்லது சுவாச நோய் அறிகுறிகள் ஏற்பட்டால், வீட்டிலேயே இருக்கவும், மற்றவர்களைச் சந்திக்காமல் இருக்கவும், நோய் பாதிப்பு உள்ளவரை சந்திக்கும் போது முக கவசம் அணியவும் உச்சக் குழு அழைப்பு விடுத்துள்ளது.
அனைவரையும், குறிப்பாக முதியவர்கள், நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்கள் மூடிய இடங்களில் முக கவசம் அணிவதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸைப் பெற வேண்டும் என்றும் உச்சக் குழு வலியுறுத்தியுள்ளது.
மேலும் தடுப்பு நடவடிக்கைகளை கையாள்வதில் அரசு, தனியார் மற்றும் சிவில் ஏஜென்சிகளின் ஆக்கபூர்வமான பங்கையும், தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த அவர்கள் செய்த பங்களிப்புகளையும் குழு பாராட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.