UAE: துபாயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2.38 லட்சம் மோசடி.. தேடல் வேட்டையில் காவல்துறை..!
துபாயில் வேலை வாங்கித் தருவதாக இளைஞரிடம் 2.38 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 28 வயதான இர்பான் அலி வேலை தேடி வந்துள்ளார். இதற்காக இணையதளத்தில் பதிவு செய்திருந்தார். கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி வந்த ஈமெயிலில் துபாயில் உள்ள குளோபல் பார்மா கம்பெனியில், சைன்டிபிக் ஆபீசர் பணி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
இதனை அடுத்து, இர்பான் அலியின் மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், துபாய் குளோபல் பார்மா கம்பெனி சார்பாக பேசுவதாகவும், துபாய் வேலையில் சேர புராஸசிங் கட்டணம், செக்யூரிட்டி டிபாசிட், விசா புராசசிங் கட்டணம் கட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறிய வங்கிக் கணக்கிற்கு, இர்பான்அலி 2.38 லட்சம் ரூபாய் கடந்த ஏப்ரல் மாதம் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் அனுப்பினார். பணம் பெற்றுக் கொண்ட மர்ம நபரை அதன்பின் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதுகுறித்து நேற்று இர்பான் அலி விழுப்புரம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், காவல்துறை அதிகாரி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.