வெளிநாடு வாழ் இந்தியர்கள் லோக்சபா தேர்தலில் வாக்களிக்க NRI வாக்காளர் அட்டையைப் பெறுவது எப்படி.?
இந்தியாவில் எதிர்வரும் 2024, ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் 2024, ஜூன் 1 ஆம் தேதி வரை, இந்திய அளவிலான லோக்சபா தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்திய அளவில் நடக்கவுள்ள இந்த தேர்தலில், UAE உள்ளிட்ட அனைத்து வெளிநாடுகளில் வசிக்கக்கூடிய இந்திய நாட்டவர்களும் வாக்களிக்க முடியும் என்று இந்திய சட்டம் கூறுகிறது.
அதாவது, இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 2010 இல் திருத்தம் செய்யப்பட்டதன் மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் தேர்தலில் வாக்களிக்க உரிமை உண்டு. எனவே, வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க விரும்பினால், அதற்கான நடைமுறைகள் என்ன? தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி? என்பது பற்றிய விபரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்திய சட்டத்தின்படி, ஒவ்வொரு NRI நபரும் வாக்களிக்கும் உரிமையைப் பெற சரியான இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டும். அத்துடன், இந்தியாவில் உள்ள அவர்களின் தொகுதியில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட ஆண்டு, ஜனவரி 1 ஆம் தேதியின்படி அவர் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் என்பதும் முக்கியமானதாகும்.
வெளிநாடு வாழ் இந்தியர் வாக்காளர் அட்டைக்குப் பதிவு செய்வது எப்படி?
ஆன்லைன் பதிவு:
1. இந்திய தேர்தல் ஆணையம் அல்லது வாக்காளர் போர்டல் சேவை (voter portal service) இணையதளத்தைப் பார்வையிடவும். அதில் உங்கள் மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தைத் தேர்ந்தெடுத்து, மாநில தேர்தல் ஆணையப் பகுதிக்குச் செல்லவும்.
2. பின்னர், படிவம் 6A வைத் தேர்வு செய்து பதிவிறக்கவும் அல்லது நீங்கள் வசிக்கும் நாட்டிலுள்ள இந்திய மிஷனிலிருந்து படிவம் 6A ஐப் பெறலாம். படிவத்தை நிரப்பி பின்னர், ஸ்கேன் செய்து அதில் பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படத்தை ஒட்டவும்.
3. அதன்பிறகு உங்கள் புகைப்படம், இந்தியாவில் உள்ள உங்கள் வீட்டு முகவரி, வசிக்கும் நாட்டின் விசா மற்றும் பிற விவரங்களைக் கொண்ட பாஸ்போர்ட் பக்கங்களின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களை ஸ்கேன் செய்து, ECI இணையதளத்தில் ஸ்கேன் செய்யப்பட்ட படிவத்தைப் பதிவேற்றவும்.
4. அதுவே, நீங்கள் அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க விரும்பினால், படிவம் 6A இன் கையொப்பமிடப்பட்ட நகல் மற்றும் தேவையான ஆவணங்களின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களை இந்தியாவில் உள்ள தேர்தல் மாவட்ட அதிகாரியின் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அதற்கான முகவரியை ECI இணையதளத்தில் பெறலாம்.
ஆஃப்லைன் பதிவு
நீங்கள் NRI வாக்காளர் ஐடிக்கு ஆஃப்லைனில் விண்ணப்பிக்க விரும்பினால், நீங்கள் வசிக்கும் தொகுதிக்கு நேரில் சென்று உங்கள் தொகுதியில் உள்ள தேர்தல் பதிவு அலுவலகத்தை பார்வையிடவும். பின்னர் படிவம் 6A ஐ நிரப்பி, பின்வரும் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
- பாஸ்போர்ட் அளவிலான வண்ண புகைப்படம்.
- இந்திய பாஸ்போர்ட் பக்கங்களின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்.
- இந்தியாவில் உள்ள முகவரி மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் செல்லுபடியாகும் விசாவின் நகல்
- சரிபார்ப்புக்காக உங்கள் ஒரிஜினல் பாஸ்போர்ட்டைக் காட்ட வேண்டும்.
விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு என்ன நடக்கும்?
1. உங்கள் விண்ணப்பத்தை ஆய்வு செய்து, பின்னர் தேர்தல் பதிவு அலுவலர், வாக்குச்சாவடி பகுதியின் பூத் நிலை அதிகாரியை கள சரிபார்ப்பிற்கு அனுப்புவார். அவர் விசாரணையின் நோக்கத்திற்காக, பாஸ்போர்ட்டில் குறிப்பிட்டுள்ளபடி, இந்தியாவில் உள்ள உங்கள் வீட்டு முகவரியைப் பார்வையிடுவார்.
2. உங்கள் ஆவணங்களைச் சரிபார்ப்பதற்கான அறிவிப்பை வழங்க உங்களிடம் உறவினர்கள் இல்லை என்றாலோ அல்லது சரிபார்ப்பில் அதிகாரி திருப்தியடையவில்லை என்றாலோ, ஆவணங்கள் நீங்கள் வசிக்கும் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்திற்குச் சரிபார்ப்பதற்காக அனுப்பப்படும்.
3. தேர்தல் பதிவு அதிகாரியின் இறுதி முடிவானது, படிவம் 6A-ல் குறிப்பிடப்பட்டுள்ள வெளிநாட்டில் உள்ள முகவரிக்கு அஞ்சல் மூலமாகவும், படிவத்தில் நீங்கள் மொபைல் எண்ணைக் கொடுத்திருந்தால் SMS மூலமாகவும் உங்களுக்கு தெரிவிக்கப்படும்.
4. அவ்வாறு நீங்கள் வாக்களிக்க தகுதியுடையவராக தேர்தல் பதிவு அதிகாரியால் அறிவிக்கப்பட்டால், ECI இணையதளத்தில் “Overseas Electors” என்ற தனிப் பிரிவில் ஒரு NRI ஆக உங்கள் பெயரை அங்கே காண்பீர்கள்.
எவ்வாறாயினும், அமீரகம் உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய நாட்டவர்கள் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் வாக்காளராகப் பதிவு செய்ய முடியும் என்றாலும், தங்களின் வாக்கை செலுத்த அவர்கள் அந்தந்த தொகுதிக்கு நேரில் செல்ல வேண்டும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel