ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷார்ஜா, அஜ்மான், ஃபுஜைரா, ராஸ் அல் கைமா மற்றும் உம் அல்-குவைன் உள்ளிட்ட வடக்கு எமிரேட்களில் பணிபுரியும் தனியார் துறை ஊழியர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்களுக்கு, ஆண்டுக்கு 320 திர்ஹம்ஸில் இருந்து தொடங்கும் அடிப்படை சுகாதார காப்பீட்டுத் திட்டம் (basic health insurance) அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் எமிராட்டிஷேசன் அமைச்சத்தால் (MoHRE) அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த புதிய திட்டம் வருகின்ற ஜனவரி 1, 2025 முதல் வடக்கு எமிரேட்களில் அமலுக்கு வரும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 100 சதவீத தொழிலாளர்கள் சுகாதாரக் காப்பீட்டின் கீழ் இருப்பதை இது உறுதி செய்யும் என்றும் கூறப்படுகிறது. இந்த காப்பீட்டுத் திட்டம் ஏற்கனவே அபுதாபி மற்றும் துபாயில் உள்ள தனியார் ஊழியர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே, இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஜனவரி 1, 2025 முதல் துபாய்கேர் நெட்வொர்க் அல்லது அங்கீகாரம் பெற்ற காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து இன்சூரன்ஸ் நிறுவன இணையதளம் மற்றும் ஸ்மார்ட் அப்ளிகேஷன் மற்றும் நாடு முழுவதும் உள்ள வணிகச் சேவை மையங்கள் மூலம் இந்த புதிய காப்பீட்டுத் தொகுப்பை தனியார் நிறுவன முதலாளிகள் வாங்கலாம் என்று அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் (MoHRE) தெரிவித்துள்ளது.
காப்பீடு தொடர்பான விபரங்கள்
இது தொடர்பாக வெளியான தகவல்களில், அடிப்படை சுகாதாரக் காப்பீட்டுத் தொகுப்பின் கீழ், நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு காத்திருக்கும் காலம் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், புதிய திட்டம் 1 முதல் 64 வயதுடைய நபர்களை உள்ளடக்கியது என்றும், இந்த வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவ அறிக்கை படிவத்தை பூர்த்தி செய்து சமீபத்திய மருத்துவ அறிக்கைகளை இணைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பேக்கேஜில் நோயாளிகள் மருத்துவ சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், உள்நோயாளிகளுக்கான சிகிச்சைக்கான 20 சதவீத கூட்டுக் கட்டணத்துடன் சிகிச்சை செலவுகளும் கவரேஜ் ஆகும். மேலும், காப்பீடு செய்தவர் ஒரு வருடத்திற்கு 1,000 திர்ஹம்ஸ் உடன் மருந்துகள் உட்பட ஒரு வருகைக்கு அதிகபட்சமாக 500 திர்ஹம் செலுத்துகிறார் எனில், இந்த வரம்புகளுக்கு அப்பால் இன்சூரன்ஸ் நிறுவனம் 100 சதவீத சிகிச்சை செலவுகளுக்கு ஈடுசெய்யப்படும் என்று கூறப்படுகிறது.
அதேபோல், மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமில்லாத சிறிய நடைமுறைகள் தேவைப்படும் வெளிநோயாளிகளைப் பொறுத்தவரை, இணை-பணம் (co-payment) 25 சதவீதம் ஆகும். அங்கு காப்பீடு செய்தவர் ஒரு வருகைக்கு அதிகபட்சமாக 100 திர்ஹம்ஸ் செலுத்துகிறார் எனில், ஏழு நாட்களுக்குள் அதே உடல்நிலைக்கு பின்தொடர்தல் வருகைகளுக்கு இணை கட்டணம் எதுவும் தேவையில்லை. அதே நேரத்தில், ஆண்டு வரம்பு 1,500 திர்ஹம்ஸ் உடன் மருந்துகளுக்கான இணை-கட்டணங்கள் 30 சதவிகிதமாக இருக்க வேண்டும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
MoHRE வெளியிட்டுள்ள தகவல்களின் படி, ஏழு மருத்துவமனைகள், 46 கிளினிக்குகள் மற்றும் மருத்துவ மையங்கள் மற்றும் 45 மருந்தகங்கள் இந்த அடிப்படைக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ளன. குறிப்பாக, தொழிலாளி மட்டுமல்லாமல், அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்கள், காப்பீட்டுக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அதே பலன்கள் மற்றும் கட்டணங்களை அணுகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
அமீரக அரசின் இந்த புதிய சுகாதார காப்பீட்டுத் திட்டம், தொழில் சந்தையில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் விரிவான பாதுகாப்பு முறையை விரிவுபடுத்துவதற்கான அமீரகத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதுடன், தனியார் துறை ஊழியர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்களுக்கு உயர்தர சுகாதார சேவைகளை வழங்குவதன் மூலம் அனைவருக்கும் ஒரு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதாகவும் அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel