ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகமானது, விமானப்படை மற்றும் வான் பாதுகாப்புப் படைகள் 137 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 209 ட்ரோன்களை வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாக அறிவித்துள்ளது.
நேற்று (சனிக்கிழமை) தாக்குதல் தொடங்கியதிலிருந்து, 132 ஈரானிய ஏவுகணைகள் அழிக்கப்பட்டன என்றும், 5 கடலில் விழுந்தன என்றும் கூறப்பட்டுள்ளது. கூடுதலாக, 195 ஈரானிய ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டன, 14 நாட்டின் பிரதேசங்கள் மற்றும் நீர்நிலைகளுக்குள் விழுந்து சில சேதங்களை ஏற்படுத்தின என கூறப்பட்டுள்ளது.
சிதறிய பாகங்கள் கீழே விழுந்ததால், பொதுமக்களின் சொத்துக்களுக்கு சிறிய பொருள் சேதம் ஏற்பட்டதாக ஐக்கிய அரபு அமீரக அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கூறுகையில் “இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளின்படி நிலைமையைக் கையாள முழு தயார்நிலை மற்றும் திறன்களுடன்” அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர் என குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பாதிக்கப்பட்ட இடங்களைப் பாதுகாப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை ஐக்கிய அரபு அமீரகம் கண்டித்ததுடன், இந்த தாக்குதலுக்கு எதிர்வினையாற்றவும், அதன் பிரதேசங்கள், மக்கள் மற்றும் குடியிருப்பாளர்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் ஐக்கிய அரபு அமீரகம் தனது முழு உரிமையையும் கொண்டுள்ளது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.