ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையே போர் தொடங்கி இன்றுடன் மூன்று நாட்கள் ஆகும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்திலும் மூன்று நாட்களாக விட்டு விட்டு வான்வெளி தாக்குதலை ஈரான் மேற்கொண்டு வருகிறது. அதில் இன்று மூன்றாவது நாளில் அமீரகத்தின் மீது ஈரான் நடத்திய 9 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 6 க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் 148 ட்ரோன் தாக்குதல்களை அமீரகத்தின் வான் பாதுகாப்புப் படை வெற்றிகரமாக இடைமறித்ததாக அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை பிப்.28 முதல் ஈரானிய தாக்குதல் தொடங்கியதிலிருந்து, அமீரகத்தை நோக்கி ஏவப்பட்ட 174 பாலிஸ்டிக் ஏவுகணைகளில் 161 ஏவுகணைகள் அழிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 13 ஏவுகணைகள் கடலில் விழுந்தமாக அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
கூடுதலாக, 689 ஈரானிய ட்ரோன்கள் இதுவரையிலும் கண்டறியப்பட்டு, அதில் 645 ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 44 ட்ரோன்கள் நாட்டின் எல்லைக்குள் விழுந்தது. மேலும், 8 க்ரூஸ் ஏவுகணைகள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலினால் இதுவரை 3 பேர் உயிரிழந்ததுடன், 68 பேர் சிறிய காயங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் கேட்கப்பட்ட பயங்கர சப்தங்கள், அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்ததாலும், போர் விமானங்கள் ட்ரோன்கள் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளை இடைமறித்ததாலும் ஏற்பட்ட சப்தங்கள் என்று பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியது.
ஈரானின் இந்த தாக்குதலை அமைச்சகம் கடுமையாகக் கண்டித்ததுடன், இது ஒரு அப்பட்டமான ஆக்கிரமிப்புச் செயலாகவும், தேசிய இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறல் எனவும் கூறியுள்ளது.
மேலும், இதற்கு பதிலடி கொடுக்கவும், நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதை உறுதி செய்யும் வகையிலும், அதன் தேசிய நலன்கள் மற்றும் திறன்களைப் பாதுகாக்கும் வகையிலும், அதன் பிரதேசங்கள் மற்றும் மக்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் அமீரகத்திற்கு முழு உரிமை உள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், எந்தவொரு அச்சுறுத்தல்களையும் சமாளிக்கவும், அதன் தேசிய நலன்கள் மற்றும் திறன்களைப் பாதுகாக்கவும் பாதுகாப்பு அமைச்சகம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை குறிவைக்கும் எதையும் உறுதியாக எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
நாட்டின் குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பு என்பது சமரசம் செய்ய முடியாத மிக உயர்ந்த முன்னுரிமையாகும் என்று கூறியதுடன், தாக்குதல் தொடர்பாக நாட்டில் உள்ள அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து தகவல்களைப் பெறவும், வதந்திகள் அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்கவும் பொதுமக்களை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel