ஐக்கிய அரபு அமீரக வான்வெளி முழுவதும் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (GCAA) அறிவித்துள்ளது.
விமானங்கள் மற்றும் விமானக் குழுவினரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதேசத்தைப் பாதுகாப்பதற்கும், விதிவிலக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் நாட்டின் வான்வெளியை இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை தற்காலிகமாக மூடினர்.
இந்நிலையில் நிலைமை சீரடைந்ததைத் தொடர்ந்து, தற்காலிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நீக்கப்பட்ட நிலையில், துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சேவைகள் மீண்டும் தொடங்குகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் செயல்பாட்டு மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் குறித்த விரிவான மதிப்பீட்டிற்குப் பிறகும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்தும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் விமானப் போக்குவரத்தின் மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, தொடர்ச்சியான நிகழ்நேரக் கண்காணிப்பு நடைமுறையில் உள்ளது என்றும் GCAA தகவல் தெரிவித்துள்ளது.
ஏதேனும் முன்னேற்றங்கள் நிகழும்போது தொடர்புடைய அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் தொடர்ந்து தகவல் தெரிவிப்பதாகவும் GCAA உறுதிப்படுத்தி உள்ளது.
மேலும் விமான அட்டவணைகள் தொடர்பான சமீபத்திய புதுப்பிப்புகளைப் பெற பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறும் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து விமான நிறுவனங்களால் பயணிகளுக்கு தங்குமிடம் மற்றும் தேவையான உதவி வழங்கப்படும் என்பதையும் குறிப்பிட்டுள்ளது.
இந்த விதிவிலக்கான சூழ்நிலைகளில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மற்றும் புரிதலுக்கு நன்றி தெரிவித்ததுடன், அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து மட்டுமே தகவல்களைப் பெறுமாறு ஆணையம் அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளது.