இந்தியா : செப்டம்பர் மாதமும் நீடிக்கும் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை..!! DGCA அறிவிப்பு..!!
இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையானது செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தற்பொழுது அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியாவில், கடந்த மார்ச் மாதம் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையானது சமீப காலமாக ஒவ்வொரு மாதமாக நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு முன்னதாக ஜூலை மாத இறுதியில், ஆகஸ்ட் மாதம் 31 ம் தேதி வரையிலும் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது செப்டம்பர் மாதம் 30 வரையிலும் தடை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் இந்தியா சில குறிப்பிட்ட நாடுகளுடன் போடப்பட்ட “Air Bubble” எனும் ஒப்பந்தப்படி சிறப்பு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதே போல், வந்தே பாரத் திட்டத்தின் மூலமும் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் தாயகத்திற்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர்
இந்த சிறப்பு விமான சேவைகளானது தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் எனவும் சரக்கு விமான போக்குவரத்து சேவைகளுக்கும் இந்த தடை பொருந்தாது என்றும் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டுள்ளது.