ADVERTISEMENT

வழிதவறி அமீரகத்திற்கு வந்து சிக்கித்தவித்த அரிய வகை திமிங்கலம்..!! மீண்டும் கடலுக்குள் விட அதிகாரிகள் மேற்கொண்ட மாபெரும் மீட்பு நடவடிக்கை..!!

Published: 6 Dec 2020, 2:18 PM |
Updated: 6 Dec 2020, 2:18 PM |
Posted By: admin

உலகிலேயே மிகவும் பெரிய மீன் இனமான திமிங்கலத்தின் அரிய வகை திமிங்கல சுறா ஒன்று அபுதாபியின் லகூன் பகுதி ஒன்றில் வழி தவறி சிக்கிக் கொண்டதை  பத்திரமாக மீட்டு மீண்டும் அதன் வாழ்விடத்திற்கு திரும்ப அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ள சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

ADVERTISEMENT

அபுதாபியின் அல் பாஹியா பகுதியில் செயற்கையாக மனிதனால் உருவாக்கப்பட்ட லகூனில் (lagoon) இந்த 6 மீட்டர் நீளமுள்ள திமிங்கல சுறாவனாது சிக்கி தவித்ததை அடுத்து அமீரகத்தில் முதன் முறையாக மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அபுதாபி சுற்றுச்சூழல் ஏஜென்சி மற்றும் தேசிய மீன்வளத்துறை அதிகாரிகளுடன் ஒரு வனவிலங்கு மீட்புக் குழு ஆகியவை இணைந்து இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிக்கி தவித்த இந்த திமிங்கல சுறாவினை அரேபிய வளைகுடாவிற்கு வெளியே 20 கி.மீ தூரத்தில் கொண்டு சென்று விடுவதற்கு அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT

அபுதாபி அரசின் ஊடக அலுவலகம் பகிர்ந்த வீடியோவின் படி, சுறாவை பாதுகாப்பாக பிடிப்பதை உறுதி செய்வதற்காக டைவர்ஸ் (Divers) சுறாவினை கண்காணித்ததாகவும், சுறாவின் இயக்கங்களை கண்காணிக்கவும் அதன் நடத்தை பற்றிய புரிதலை அதிகரிக்கவும் ஒரு கண்காணிப்பு சாதனம் (tracking device) நிறுவப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரேபிய வளைகுடாவுக்கு 20 கி.மீ தூரத்தில் சுறாவை விடுவிப்பதற்கு அபுதாபி மரைன் கிளப் (The Abu Dhabi Marine Club) உதவி புரிந்ததாகவும், இந்த செயல்முறையை மேற்கொள்ள ஐந்து மணி நேரம் எடுத்துக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. பின்னர் அந்த சுறாவானது பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தற்பொழுது இந்த சுறா அரேபிய வளைகுடாவில் 250 கி.மீ.க்கு மேல் பயணித்து, சுறா கூட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பது குறிபிடத்தக்கது.