இந்தியா, துபாய் இடையே மீண்டும் தொடங்கவிருக்கும் விமான சேவை..!! புதிய பயண நடைமுறைகளை வெளியிட்ட துபாய்..!!
இந்தியா மற்றும் பிற நாடுகளிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் பயணிக்க அமீரக அரசு விதித்திருந்த பயண தடை தற்போது வரை அமலில் இருக்கும் சூழலில், இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நைஜீரியாவிலிருந்து வரும் பயணிகளுக்கான நடைமுறைகளில் துபாய் அரசு திருத்தம் செய்துள்ளதாக அதிகாரிகள் இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளனர். இந்த புதிய நடைமுறைகள் வரும் 2021 ஜூன் 23 புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
துபாய் அரசு வெளியிட்டுள்ள புதிய நடைமுறைகளின்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் பெற்ற அமீரக ரெசிடென்ஸ் விசா வைத்திருக்கும் குடியிருப்பாளர்களுக்கு நாட்டினுள் நுழைய அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுளளது.
மேலும் அனைத்து பயணிகளும் துபாய் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட எதிர்மறை கோவிட் -19 சோதனை முடிவை வைத்திருக்க வேண்டும். எனினும் ஐக்கிய அரபு அமீரக குடிமக்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று QR குறியிடப்பட்ட PCR சோதனை முடிவு சான்றிதழ்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்து பயணிகளும் விமானம் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னர் ரேபிட் PCR சோதனை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து துபாய் வரும் அனைத்து பயணிகளும் துபாய் விமான நிலையத்திற்கு வந்தவுடன் இங்கு மீண்டும் PCR சோதனை மேற்கொள்ள வேண்டும். பயணிகள் தங்கள் PCR சோதனை முடிவைப் பெறும் வரை நிறுவன தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. துபாய் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் சோதனை முடிவானது 24 மணி நேரத்திற்குள் பெறப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஐக்கிய அரபு அமீரக குடிமக்களுக்கும், இந்திய அரசுப் பிரதிநிதிகளுக்கும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலிருந்து பயணிக்க ஜூன் 23 முதல் புதிய பயண நடைமுறைகள் வெளியிடப்பட்டிருப்பதைத் தொடர்ந்து எமிரேட்ஸ் விமான நிறுவனம் ஜூன் 23 முதல் இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு விமான சேவையை தெடங்கவிருப்பதாக அறிவித்துள்ளது.