கோலாகலமாக ஆரம்பிக்கவுள்ள ‘துபாய் சம்மர் சர்ப்ரைஸ்-2021’..!! தள்ளுபடி, பரிசுகள், வான வேடிக்கை என களை கட்டவிருக்கும் துபாய்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் துபாயில் ஒவ்வொரு வருட கோடைகாலத்தின் போதும் துபாய் சம்மர் சர்ப்ரைசஸ் (DSS) எனும் நிகழ்வானது விமரிசையாகக் கொண்டாடப்படும்.
இந்த வருடம் கோடைகாலம் ஆரம்பித்ததையொட்டி, ஜூலை 1 முதல் DSS-2021 ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ஆரம்பிக்கவிருக்கும் துபாய் சம்மர் சர்ப்ரைஸில் அடுத்த சில வாரங்களுக்கு நகரம் முழுவதும் உள்ள மால்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் அதிரடி விற்பனை, பொருட்களுக்கு தள்ளுபடி, விளம்பரங்கள், ஒப்பந்தங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் நடக்கவிருக்கின்றன.
இந்த ஷாப்பிங் கொண்டாட்டத்தின் 24 வது பதிப்பானது செப்டம்பர் 4 வரை இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
துபாய் ஃபெஸ்டிவல் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனம் (DFRE) ஏற்பாடு செய்துள்ள DSS இன் 2021 பதிப்பில் துபாய் வண்ணமயமான அலங்காரங்களில் ஒளிரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க நாளான ஜூலை 1 அன்று புர்ஜ் கலீஃபாவில் வானவேடிக்கை, ப்ரொஜக்ஷன் மற்றும் ஃபவுண்டைன் ஷோ, தி பாயிண்டில் உள்ள பாம் ஃபவுண்டைன் மற்றும் துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மாலில் இமேஜின் ஷோ என களைகட்டவுள்ளது. DSS ப்ரொமோஷன்களில் மில்லியனர் ஆகும் வாய்ப்பு மற்றும் டெய்லி சர்ப்ரைசஸ் ஆகியவையும் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கம் போலவே, DSS குடியிருப்பாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் அற்புதமான பரிசுகளை வெல்லும் வாய்ப்புகள் மற்றும் ஷாப்பிங்கில் சூப்பர் சலுகைகள் ஆகியவற்றை வழங்கும் என்று DFRE கூறியுள்ளது.
DFRE யின் தலைமை நிர்வாக அதிகாரி அகமது அல் காஜா கூறுகையில், “வருடாந்திர சில்லறை வர்த்தகத்தில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் DSS ஒன்றாகும். இந்த வருடம் 10 வாரங்களுக்கு இதுவரை இல்லாத அளவில் மிகச் சிறந்த விற்பனை, பொருட்களுக்கு தள்ளுபடி, விளம்பரங்கள், ஒப்பந்தங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளை வழங்கவிருக்கின்றது” என கூறியுள்ளார்.
மேலும் DSS நிகழ்வின் போது சமூக இடைவெளி மற்றும் முககவசம் அணிவது உட்பட கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள் அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.