UAE: கொரோனா பாதித்தவரை உடனடியாகக் கண்டறிய அதிநவீன ஸ்கேனர்..!! அபுதாபி அரசு ஒப்புதல்..!!
கொரோனா நோய்த்தொற்றுகளைக் கண்டறிய உதவும் அதிநவீன EDE ஸ்கேனர்கள் ஷாப்பிங் மால்கள், சில குடியிருப்புப் பகுதிகள் மற்றும் அபுதாபியில் உள்ள அனைத்து நில மற்றும் விமான நிலைய நுழைவு இடங்களிலும் வைக்கப்படும் என்று அபுதாபி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அபுதாபி சுகாதாரத் துறையின் (DoH) ஒப்புதலைத் தொடர்ந்து அபுதாபியின் அவசர, நெருக்கடி மற்றும் பேரழிவுக் குழு ஞாயிற்றுக்கிழமை, EDE ஸ்கேனர்கள் பயன்படுத்தப்படும் இடங்களின் பட்டியலை விரிவுபடுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிவதில் EDE ஸ்கேனர்கள் திறன் வாய்ந்தது என்று DoH ஏற்கெனவே கூறியுள்ளது.
சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேம்படுத்துவதற்கான அபுதாபியின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த முடிவு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான தடுப்பு நடைமுறைகளுக்கு உட்பட்ட பாதுகாப்பான மண்டலங்களை நிறுவுவதன் மூலம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் EDE ஸ்கேனிங் தொழில்நுட்பமும் முக்கிய பங்கு வகிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த ஸ்கேனர் ஒரு நபரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவராக அடையாளம் கண்டால், அவர்கள் குறிப்பிட்ட இடங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அத்துடன் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நெறிமுறையைப் பின்பற்றி 24 மணி நேரத்திற்குள் PCR சோதனை மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.