இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் விமான பயணிகள் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது தொடர்ந்து அமலில் உள்ளது என்று பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் (GCAA) அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொரோனாவின் இரண்டாவது அலைப் பரவலை சமாளிக்கும் வகையில் இந்தியாவில் இருந்து உள்வரும் பயணிகள் போக்குவரத்து, மறு அறிவிப்பு வெளியிடப்படும் வரை இடைநிறுத்தப்படும் என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு வரும் பயணிகள் போக்குவரத்தைப் பொருத்தவரை, இந்த தடையானது நீடிக்கிறது. இந்தியாவின் நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம், உள்வரும் பயணிகள் மீதான இடைநீக்கத்தை எப்போது நீக்குவது என்பது குறித்த முடிவு அனைவரின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து உள்வரும் பயணிகளை தற்காலிகமாக நிறுத்துவதை தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரழிவுகள் மேலாண்மை ஆணையம் (NCEMA) மற்றும் GCAA கடந்த ஏப்ரல் 24 அன்று முதலில் 10 நாட்களுக்கு அறிவித்தன. இதைத் தொடர்ந்து, மே 5 ம் தேதி இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு இயக்கப்படும் பயணிகள் விமான சேவை காலவரையின்றி மறு அறிவிப்பு வரும் வரை நீடிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன் பின்னர் ஜூன் 19 அன்று, துபாய் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை குழு, இந்தியாவில் இருந்து துபாய்க்கு பாதுகாப்பான பயணத்தை ஜூன் 23 அன்று மீண்டும் தொடங்குவதற்கான சமீபத்திய நெறிமுறைகளை அறிவித்தது. இருப்பினும், விமான வலைத்தளங்களில் விமான நடவடிக்கைகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
மேலும், துபாயின் முதன்மை விமான நிறுவனமான எமிரேட்ஸ் தனது பயணிகளுக்கு இந்தியாவில் இருந்து துபாய் செல்லும் விமானங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று பயணிகளின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும்் வகையில் தற்பொழுது தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பயண நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களில் எந்த மாற்றமும் உடனடியாக புதுப்பிக்கப்படும் என்றார்.