UAE: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பெரிய அளவிலான தடுப்பூசி மற்றும் சோதனைப் பிரச்சாரம் துவக்கம்..!! பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுகோள்..!!
கொரோனாவிற்கான தடுப்பு நடவடிக்கையாக தீவிரமான பரிசோதனை மற்றும் தடுப்பூசி பிரச்சாரத்திற்கு அபுதாபியின் அவசர, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை குழு ஒப்புதல் அளித்து தற்போது இத்திட்டம் துவங்கியுள்ளது.
தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, அபுதாபியின் மக்கள அடர்த்தி அதிகம் உள்ள பகுதியான முஸாஃபா பகுதியில் தொடங்கும் இந்த பிரச்சாரம், தினசரி வணிக நடவடிக்கைகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல், முசாஃபா பகுதியில் உள்ள குறிப்பிட்ட தொகுதிகளில் படிப்படியாக செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு இப்பகுதியில் மீண்டும் சோதனைப் பிரச்சாரம் துவங்கப்பட்டிருக்கின்றது. இதற்கு முன்னர், தொடர்ந்து ஆறு வாரமாக சோதனைப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், பிரச்சாரத்தை விரைவாக முடிப்பதை உறுதி செய்வதற்கான நடைமுறைகளை கையாள்வதில் நெகிழ்வுத்தன்மையை வெளிப்படுத்தவும், சுகாதார நலன்களுக்காகவும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.