இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இயக்கப்படும் பயணிகள் விமான சேவைக்குண்டான தடையை மறு அறிவிப்பு வரும் வரையிலும் நீட்டிப்பு செய்வதாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தனது வலைதளத்தில் தெரிவித்துள்ளது.
அத்துடன் கடந்த 14 நாட்களில் இந்தியாவில் டிரான்ஸிட் விமானங்களில் பயணம் செய்தவர்களுக்கும் தடை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக எமிரேட்ஸ் நிறுவனம் ஜூலை 7 முதல் இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு விமான சேவையை இயக்குவதற்கு எதிர்பாரப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், அமீரக குடிமக்கள், கோல்டன் விசா வைத்திருப்பவர்கள், அரசுப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட புதிய பயண வழிமுறைகளைப் பூர்த்தி செய்தால், இதில் விலக்கு பெற்று பயணம் செய்ய அனுமதிக்கப்படலாம் என கூறியுள்ளது.
இதற்கு முன்னர் எதிஹாட் ஏர்வேஸ் இந்தியா, இலங்கை உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து ஜூலை 21 வரை விமான சேவையை ரத்து செய்வதாக அறிவித்திருந்தது.
தற்பொழுது அமீரக அரசும் தனது குடிமக்களை இந்தியா, இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.