இந்தியா, இலங்கையில் இருந்து அமீரகம் வர ஆகஸ்ட் 7 வரை தடை நீட்டிப்பு.. எமிரேட்ஸ் தகவல்..!!
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இயக்கப்படும் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையானது குறைந்த பட்சம் ஆகஸ்ட் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று துபாயின் முதன்மை விமான நிறுவனமான எமிரேட்ஸ் தனது புதிய பயணம் தொடர்பான புதுப்பிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த 14 நாட்களில் இந்த நாடுகள் வழியாக டிரான்சிட்டில் பயணித்த பயணிகள் வேறு எந்த இடத்திலிருந்தும் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைய ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் என்று விமான நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள், கோல்டன் விசாக்கள் வைத்திருப்பவர்கள், அரசுப்பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது எனவும் விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சமீபத்தில் அபுதாபியை மையமாக கொண்டு இயங்கும் விமான நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ் ஆகஸ்ட் 2 வரை இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு இயக்கப்படும் விமானங்களுக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.