அமீரகத்தில் 24×7 என முழுநேரமும் இயங்கும் புதிய கொரோனா சேவை மையம்..!! 75 திர்ஹம்ஸில் PCR சோதனை..!!
அமீரகம் முழுவதும் பல கொரோனா சேவை மையங்கள் திறக்கப்பட்டு PCR சோதனையும் இலவச தடுப்பூசி சேவையும் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்பொழுது அஜ்மானில் ஒரு புதிய கொரோனா சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது.
இது ஒவ்வொரு நாளும் 10,000 பேர் வரை சேவை வழங்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அல் ஸவ்ரா ரவுண்டானாவுக்கு எதிரே உள்ள ஃபெஸ்டிவல் லேண்டில் அமைந்துள்ள இந்த மையம் கொரோனா தடுப்பூசி, PCR மற்றும் DPI லேசர் சோதனை சேவைகளை வழங்குகிறது.
புதிய மையம் அஜ்மானில் உள்ள தொழில்துறை பகுதியில் உள்ள தொழிலாளர்களைக் கருத்தில் கொண்டு திறக்கப்பட்டதாகவும் இருப்பினும் அஜ்மான் மற்றும் அமீரகத்தின் வடக்குப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் சேவை செய்யும் என்று தமவ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் வெளி தளங்களின் இயக்குநர் முபாரக் சைஃப் அல் கெட்பி எமரத் அல் யூம் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இந்த மையம் இலவச கொரோனா தடுப்பூசி, 50 திர்ஹமிற்கு DPI லேசர் சோதனைகள் மற்றும் 75 திர்ஹமிற்கு PCR சோதனைகளை வழங்கும் என்று அவர் விளக்கியுள்ளார்.
இந்த மையத்தில் 70 க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் செவிலியர்கள் உள்ளனர், அவர்கள் அனைவரும் முழுநேரமும் பணியில் இருப்பார்கள் என்றும், தேவைக்கேற்ப ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் அல் கெட்பி கூறியுள்ளார்.
மேலும் DPI லேசர் சோதனைகளின் முடிவுகள் மூன்று நிமிடங்களுக்குள் கிடைக்கும் என்றும் PCR சோதனைகளின் முடிவுகள் 24 மணி நேரத்திற்குள் தயாராக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் அந்த நேரத்தை 12 மணி நேரத்திற்கும் கீழாக குறைக்க நிறுவனம் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மையம் அமீரகத்தின் எந்தவொரு பகுதியில் இருந்தும் வரும் மக்களுக்கும் விதிவிலக்கு இல்லாமல் சேவை செய்யும் என்று அல் கெட்பி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கொரோனா சோதனைகளை மேற்கொள்ள விரும்பும் விசிட் விசாக்களில் உள்ளவர்களையும் இந்த மையம் ஏற்றுக்கொள்கிறது என்று அவர் கூறியுள்ளார். ஒருங்கிணைந்த விசா எண் (unified visa number) இதற்காக பயன்படுத்தப்படும் என்றும் இதன் மூலம் அல் ஹோஸ்ன் அப்ளிகேஷன் மூலம் அவர்கள் முடிவுகளைப் பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.