இந்தியா, சவூதி அரேபியா இடையே விரைவில் ஏர் பபுள் ஒப்பந்தம்..!! இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தகவல்..!!
கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக சவூதி அரேபியா நாடானது இந்தியாவிற்கு விதிக்கப்பட்ட பயணத்தடையால் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் மீண்டும் சவூதி பயணிக்க முடியாமல் உள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு சவூதி அரேபியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே பயணிக்க அனுமதிப்பதற்காக சவுதி அரேபியாவுடன் ஏர் பபுள் ஏற்பாட்டை இறுதி செய்வது குறித்து இந்தியா விவாதித்துள்ளதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி முரளீதரன் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும் உள்ள 28 நாடுகளுடன் இந்தியா தற்போது ஏர் பபுள் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது. மேற்கு ஆசியாவில், பஹ்ரைன், ஈராக், குவைத், ஓமான், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகியவற்றுடன் இத்தகைய ஒப்பந்தங்கள் மூலம் சிறப்பு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
சவுதி அரேபியாவில் 2.6 மில்லியன் இந்தியர்கள் வசிக்கின்றனர், இது மேற்கு ஆசியாவில் உள்ள வெளிநாட்டவர்களின் மிகப்பெரிய மக்கள் தொகை அடர்த்தியில் ஒன்றாகும்.
வளைகுடா நாடுகளில் சுமார் 9 மில்லியன் இந்தியர்கள் வாழ்கின்றனர், அவர்களில் பெரும்பாலோர் தொழிலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் ஆகும்.
வெளியுறவுத் துறை அமைச்சர் வி முரளீதரன், இது தொடர்பான கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், சவுதி அரேபியாவுடன் ஏர் பபுள் ஏற்பாட்டை இறுதி செய்வது குறித்து அரசு விவாதித்ததாகக் கூறினார். இந்த நேரத்தில் இரு நாட்டு மக்களும் எந்த பிரச்சனையும் இல்லாமல் பயணம் செய்ய இது அனுமதிக்கும். புதிய வகை கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், சவூதி அரேபியாவிற்கு செல்ல இந்திய பயணிகளுக்கு தடை விதித்த காரணத்தால் இந்த ஏற்பாட்டை இறுதி கட்டத்திற்கு கொண்டு செல்ல இயலவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நிலைமை மேம்படும் போது, சவுதி அரேபிய அரசிடம் இந்த பிரச்சினை கொண்டு செல்லப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்கள் தகவல்களின்படி, தொற்றுநோய் பரவலின் போது அரேபியாவிலிருந்து 7.16 லட்சத்திற்கும் அதிகமான இந்தியத் தொழிலாளர்கள் இந்தியாவுக்குத் திரும்பி வந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்புடத்தக்கது.