இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள விமான நிலையங்களுக்குப் பயணிக்கும் அமீரக ரெசிடென்ஸ் விசா உள்ள பயணிகள் பயணத்தின் போது கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள் குறித்த விபரங்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. ஏர் இந்தியாவின் சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி, பயணிகள் பின்வரும் ஆவணங்களை எடுத்துச் சென்றால் எவ்வித சிரமமும் இல்லாமல் அமீரகத்திற்கு பயணிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
அவை:
துபாயில் வழங்கப்பட்ட ரெசிடெண்ஸ் விசா வைத்திருந்து துபாய்க்கு பயணம் செய்யும், பயணிகள் GDRFA மூலம் பயணத்திற்கு முந்தைய ஒப்புதலைப் பெற வேண்டும்.
பிற எமிரேட்டில் வழங்கப்பட்ட ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவர்கள், அடையாள மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையத்திடமிருந்து (ICA) ஒப்புதலைப் பெற வேண்டும்.
எக்ஸ்போ 2020 துபாயின் அமைப்பாளர்களால் வழங்கப்பட்ட விசா உள்ளவர்கள் GDRFA / ICA அனுமதியின்றி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்கலாம்.
பயணிகள் அசல் அறிக்கையுடன் இணைக்கப்பட்ட QR குறியீட்டைக் கொண்ட எதிர்மறை கொரோனா சோதனைச் சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.
ICMR அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் விமானம் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்குள் சோதனை செய்திருக்க வேண்டும்.
ரேபிட் PCR சோதனை அறிக்கை புறப்படும் நான்கு மணி நேரத்திற்குள் இந்தியாவில் உள்ள விமான நிலையத்தில் நடத்தப்பட வேண்டும்.
ஆகஸ்ட் 12 வியாழக்கிழமை வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களில், கொரோனா தடுப்பூசி சான்றிதழை வழங்குவதற்கான தேவையை விமான நிறுவனம் குறிப்பிடவில்லை.
இதன் மூலம் புறப்படும் இடங்களில் விமானப் பிரதிநிதிகள் பயணிகளின் தடுப்பூசி நிலையை சரிபார்க்க மாட்டார்கள் என்பதை விமான நிறுவனம் அறிவுறுத்துகிறது.
இருப்பினும் இதற்கு முன்னர் அமீரக அரசு வெளியிட்ட அறிவிப்பில் ஆகஸ்ட் 15 முதல் பயணிகள் தங்கள் சொந்த நாடுகளில் தடுப்பூசி போட்டிருந்தாலும் அமீரகத்திற்கு பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தடுப்பூசிக்கான விபரங்களை ICA வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதே போல் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளிவந்த அறிவிப்பில் துபாய்க்கு செல்லும் பயணிகளுக்கு இனி தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை என அறிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ICA/GDRFA ஒப்புதல்கள் உட்பட மேலே குறிப்பிடப்பட்ட ஆவணங்களை ஒரு பயணி சமர்ப்பிக்க முடிந்தால், அவர் அமீரகத்திற்கு பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார் என கூறப்பட்டுள்ளது.
அத்துடன் விமானம் புறப்படுவதற்கு ஆறு மணி நேரத்திற்கு முன் விமான நிலையத்தை அடையுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரேபிட் PCR சோதனை கவுண்டர்கள் விமானம் புறப்படுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விமான நிறுவனம் அபுதாபி மற்றும் ராஸ் அல் கைமா செல்லும் பயணிகளின் தனிமைப்படுத்தல் விபரங்களையும் தெரிவித்துள்ளது.
அதன்படி அபுதாபிக்கு பயணம் செய்பவர்கள் அபுதாபியில் 12 நாள் வீடு அல்லது நிறுவன தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். ஆறாம் நாள் மற்றும் 11 ம் நாளில் அவர்களுக்கு PCR சோதனை நடத்தப்படும்.
ராஸ் அல் கைமா பயணிப்பவர்கள் 10 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். அவர்களுக்கு 4 மற்றும் 8 நாட்களில் PCR சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.