பஹ்ரைன் வரும் பயணிகளுக்கான நடைமுறைகளை புதுப்பித்த சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம்..!!
பஹ்ரைன் விமான நிலையம் வந்திறங்கி வருகை விசா (visa on arrival) பெற தகுதியுள்ள நாடுகளிலிருந்து கொரோனாவிற்கான தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ்களுடன் பஹ்ரைனுக்கு வரும் பயணிகள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று பஹ்ரைன் நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
பஹ்ரைன் நாட்டிற்கு வரும் பயணிகளுக்கான புதிதாக புதுப்பிக்கப்பட்ட விதிகள் நாளை மறுநாள் ஆகஸ்ட் 29 ஞாயிற்றுக்கிழமை முதல் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முந்தைய நடைமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படும் எனவும் ,மேலும் அப்பயணிகளுக்கு வந்திறங்கிய நாளிலிருந்து ஐந்தாவது நாளில் கூடுதல் PCR சோதனை தேவைப்படும் என்றும் பஹ்ரைன் செய்தி ஊடகம் வெயிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பஹ்ரைன் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள சிவப்பு நிற பட்டியலில் உள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகள், ஒரு பஹ்ரைன் நாட்டின் குடிமகனாகவோ அல்லது பஹ்ரைனில் வசிக்கும் குடியிருப்பாளராகவோ இல்லாவிட்டால் அவர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்படும் எனவும், மேலும் கடந்த 14 நாட்களில் சிவப்பு நிற பட்டியலில் உள்ள நாடுகளின் வழியாக சென்ற ட்ரான்சிட் பயணிகளுக்கும் தடை விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வருகைக்கான விசா பெற தகுதியுள்ள நாடுகளின் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழ் பெற்ற 6 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து தடுப்பூசி போடப்பட்ட பயணிகளும் கீழ்கண்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்:
>> விமானத்தில் ஏறுவதற்கு முன் 72 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட PCR சான்றிதழை வழங்க வேண்டும்.
>> பஹ்ரைன் விமான நிலையம் வந்தவுடன் PCR சோதனை மேற்கொள்ள வேண்டும்.
>> பஹ்ரைன் வந்திறங்கிய நாளிலிருந்து ஐந்தாவது நாளில் ஒரு PCR சோதனை மேற்கொள்ள வேண்டும்.
>> பின்னர் அதேபோன்று வந்திறங்கிய நாளிலிருந்து பத்தாவது நாளில் ஒரு PCR சோதனை மேற்கொள்ள வேண்டும்.
>> தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
சிவப்பு நிற பட்டியல் நாடுகளிலிருந்து வரும் 6 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட தடுப்பூசி போடப்பட்ட அல்லது தடுப்பூசி போடப்படாத அனைத்து பயணிகளும் கீழ்கண்ட விதிகளுக்கு உட்பட்டவர்கள்:
>> விமானத்தில் ஏறுவதற்கு முன் 48 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட QR குறியீட்டைக் கொண்டிருக்கும் PCR சான்றிதழை வழங்க வேண்டும்.
>> பஹ்ரைன் விமான நிலையம் வந்தவுடன் PCR சோதனை மேற்கொள்ள வேண்டும்.
>> உங்கள் இல்லத்தில் அல்லது தேசிய சுகாதார ஒழுங்குமுறை ஆணையத்தால் (NHRA) உரிமம் பெற்ற தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் பத்து நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்.
>> பஹ்ரைன் வந்திறங்கிய நாளிலிருந்து ஐந்தாவது நாளில் ஒரு PCR சோதனை மேற்கொள்ள வேண்டும்.
>> பின்னர் அதேபோன்று வந்திறங்கிய நாளிலிருந்து பத்தாவது நாளில் ஒரு PCR சோதனை மேற்கொள்ள வேண்டும்.
தற்பொழுது வரையிலும் இந்தியா, இலங்கை மலேஷியா, நேபாளம், பாக்கிஸ்தான், பங்களாதேஷ், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 25 நாடுகள் பஹ்ரைன் நாடால் அறிவிக்கப்பட்டுள்ள சிவப்பு நிற பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.