ஓமானில் 100 சதவிகித தடுப்பூசி பெற்ற சமுதாயத்தை அடைவதற்கு இலக்காக கொண்டு ஓமான் அரசால் தொடங்கப்பட்ட தடுப்பூசி பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தற்போது சுகாதார அமைச்சகம் (MoH) வெளிநாட்டவர்களுக்கு கொரோனா தொற்றுநோய்க்கான தடுப்பூசியை போடத் தொடங்கியுள்ளது.
தடுப்பூசி போடும் திட்டத்தை அவ்வப்போது விரிவுபடுத்திவரும் ஓமான் அரசு, அதன் தொடர்ச்சியாக வெளிநாட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தின் முதல் கட்டத்தை ஓமானில் உள்ள மசிரா தீவில் நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்துள்ளது.
அதன்படி, ஓமான் நாட்டில் வசிப்பவர்களில் செல்லுபடியாகும் குடியுரிமை அட்டை வைத்திருக்கும் அனைத்து வெளிநாட்டினரும் தேசிய தடுப்பூசி பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மசிரா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் இந்த முகாமில் இருந்து தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமான் நாட்டின் சுகாதார அமைச்சகத்தை சார்ந்த அதிகாரிகளின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு 400 முதல் 500 குடியிருப்பாளர்களுக்கு இந்த முகாமில் தடுப்பூசி போட முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வெளிநாட்டை சேர்ந்த ஓமான் குடியிருப்பாளர்களுக்கான இந்த தடுப்பூசி இயக்கமானது, கடந்த வாரம் முதல் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளும் தடுப்பூசி பிரச்சாரத்தின் கீழ் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியானவர்கள் என்று ஓமான் அரசால் சேர்க்கப்பட்டதன் தொடர்ச்சியாகும் என்றும், குடியிருப்பாளர்களுடன் அந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்றும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் வெளிநாட்டவர்களுக்காக தொடங்கப்பட்டுள்ள இந்த மசிரா முகாம் இரண்டு வாரங்கள் நடைபெறும் என்றும் வரும் ஆகஸ்ட் 27 அன்று முடிவடையும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தின் ஒரு பகுதியாக, மசிரா தீவில் உள்ள சுகாதார சேவைகளின் தலைவர் டாக்டர் கலீத் அல் சாடி தடுப்பூசி மையத்தை பார்வையிட்டு ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதை உறுதி செய்துள்ளார்.
இது குறித்து மசிரா தீவைச் சேர்ந்த சமூக சேவையாளர் ரஃபீக் வடனப்பள்ளி என்பவர் தெரிவிக்கையில், “வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் தடுப்பூசி மையம் வந்திருந்தனர். முதல் நாளில் கிட்டத்தட்ட 500 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான நடைமுறைகள் மிகவும் எளிமையானவை” என்று கூறியுள்ளார்.
மேலும் “வெளிநாட்டவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், தடுப்பூசி மையத்திற்குச் செல்லும்போது அவர்களின் செல்லுபடியாகும் குடியுரிமை அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும்” என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
வெளிநாட்டவர்களுக்கான தடுப்பூசி திட்டத்தின் முதல் கட்டம் தொடங்கப்பட்டிருக்கும் மாசிரா தீவில் 8,000 ஓமானிய குடிமக்களும், கிட்டத்தட்ட 6,000 வெளிநாட்டவர்களும் வசித்து வருகின்றனர். இதில் இந்தியர்கள், பங்களாதேஷியர்கள், பாகிஸ்தானியர்கள் மற்றும் பிற ஆசிய நாடுகளை சேர்ந்த வெளிநாட்டவர்கள் அதிகம் பேர் வசித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.