UAE: ஆகஸ்ட் 5 முதல் இந்தியா, இலங்கை நாடுகளிலிருந்து பயணிகள் அமீரகம் வர அனுமதி..!! NCEMA அறிவிப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தால் பயண தடை விதிக்கப்பட்ட இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து செல்லுபடியாகும் ஐக்கிய அரபு அமீரக குடியுரிமை அனுமதிகளை வைத்திருக்கும் மற்றும் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியின் இரண்டு டோஸும் போடப்பட்ட அமீரக குடியிருப்பாளர்கள் வரும் ஆகஸ்ட் 5 முதல் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளனர்.
அமீரக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த புதிய விதியானது இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் உகாண்டா ஆகிய ஆறு நாடுகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்களுக்கு பொருந்தும் என்று அமீரகத்தின் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கொரோனா வைரஸிற்கான இரண்டாவது தடுப்பூசி டோஸைப் பெற்ற பிறகு குறைந்தது 14 நாட்கள் கடந்திருக்க வேண்டும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. அத்துடன் அமீரகம் வரும்போது பயணிகள் தங்களின் தடுப்பூசி சான்றிதழை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் NCEMA அறிவுறுத்தியுள்ளது.
அமீரக அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து விரைவில் இந்தியாவிற்கும் அமீரகத்திற்கும் இடையே விமான சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது வரையிலும் இந்த குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது.
இதே போன்று கடந்த மாத இறுதியில் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், காங்கோ ஜனநாயகக் குடியரசு போன்ற நாடுகளிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைய எக்ஸ்போ 2020 துபாயின் சர்வதேச பங்கேற்பாளர்கள், கண்காட்சிகள் மற்றும் பணியாளர்களை அனுமதிக்கும் விதமாக பயணத் தேவைகளை எளிதாக்கி அமீரக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.