ஐக்கிய அரபு அமீரக அரசால் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்த நாடுகளில் இருக்கும் அமீரக குடியிருப்பாளர்களில், தங்கள் நாட்டில் கோவிட் -19 தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழை கொண்ட சில பயணிகள், அமீரகம் திரும்ப அடையாள மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் (ICA) மற்றும் குடியுரிமை மற்றும் வெளிநாட்டு விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) ஆகியவற்றிலிருந்து பயணத்திற்கு முந்தைய ஒப்புதல்களைப் பெற்று அமீரகம் திரும்பி வந்ததுள்ளதாக கலீஜ் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் செய்தியில் தெரியவந்துள்ளது.
இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை நீக்கப்பட்டு செல்லுபடியாகும் ரெசிடென்ஸ் விசா வைத்திருக்கும் குடியிருப்பாளர்கள் ICA அல்லது GDRFA விடம் முன் அனுமதி பெற்று கொரோனாவிற்கான எதிர்மறை சான்றிதழுடன் அமீரகம் திரும்பலாம் என்று அமீரக அரசு அறிவித்திருந்தது.
அந்த அறிவிப்பை தொடர்ந்து பயண அனுமதி பெற்று குடியிருப்பாளர்கள் அமீரகம் திரும்பி வருகின்றனர். இந்நிலையில், அமீரகத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத, இந்தியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட சில பயணிகளும் GDRFA விடம் பயண அனுமதி பெற்று அமீரகம் திரும்பி வந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 2 அன்று தனது வருடாந்திர விடுப்பிற்காக இந்தியா சென்றிருந்த, துபாயை வசிப்பிடமாக கொண்ட ஒரு நபர், இந்தியாவில் இருந்த காலத்தில் கோவிஷீல்ட் தடுப்பூசியை போட்டுக்கொண்டதாகவும், பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டவுடன் துபாய் திரும்ப GDRFA ஒப்புதலுக்கு விண்ணப்பித்து 45 முதல் 50 நிமிடங்களுக்குள் பயண அனுமதி பெற்றதாகவும், அதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 17 ம் தேதி துபாயை வந்தடைந்தாகவும் கூறியுள்ளார்.
மேலும் பயணத்திற்கான 48 மணிநேர PCR சோதனை முடிவானது மாதிரி சேகரிப்பின் நேரத்திலிருந்து கணக்கிடப்பட்டதாகவும், இதன் காரணமாக சிலருக்கு பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதே போன்று மும்பையில் இருந்து துபாய்க்கு பயணித்த பிரவீன் நாயர் என்பவரும் துபாய் திரும்ப 48 மணி நேரத்தில் GRDFA ஒப்புதலைப் பெற்று துபாயை வந்தடைந்தாக கூறியுள்ளார். துபாய் விமான நிலையத்தில் இரண்டாவது PCR சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அடுத்த 24 மணி நேரத்தில் PCR சோதனை முடிவு கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அடுத்ததாக இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஸ்டெஃபி ஜோசப் என்பவர் அமீரகம் திரும்ப பயணத்திற்கான முன் ஒப்புதலை 36 மணி நேரத்தில் பெற்றதாகவும், இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அவரின் குழந்தைகள் மற்றும் கணவனிடமிருந்து பிரிந்திருந்ததால் மனிதாபிமான வழக்கின் கீழ் அமீரகம் திரும்பி வந்ததாகவும் விளக்கியுள்ளார். எனினும் விமான நிலைய செக் இன் கவுண்டரில் இது குறித்து அவர் அதிகாரிகளுக்கு விளக்கியதாகவும் கூறியுள்ளார்.
பயண முகவர்கள் இது குறித்து தெரிவிக்கையில் துபாய்க்கு வரும் பயணிகளுக்கான செயல்முறை மிகவும் நேரடியானது என்று கூறியுள்ளனர்.
Musafir.com குழுவின் COO ரஹீஷ் பாபு என்பவர் கூறுகையில், “வெளிநாடுகளில் தடுப்பூசி போட்ட பயணிகள் துபாய்க்கு திரும்பி வர முடிந்தது. இதற்கான செயல்முறை தடையற்றது. துபாய் திரும்பும் பயணிகளுக்கு GDRFA ஒப்புதல் தேவை மற்றும் அவர்களின் குடியிருப்பு விசாக்கள் பாஸ்போர்ட்டில் அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் அரிதான சந்தர்ப்பங்களில், என்ட்ரி பெர்மிட் விசா வைத்திருப்பவர்களும் மனிதாபிமான விலக்கு வகைக்கு உட்பட்டால் துபாய்க்கு பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.