அமீரகத்தில் தடுப்பூசி போட்டவர்கள் மட்டும்தான் அமீரகம் திரும்ப முடியுமா..?? குடியிருப்பாளர்களிடையே நிலவும் குழப்பம்..!!
இந்தியா, இலங்கையில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்க விதிக்கப்பட்டிருந்த தடையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட செல்லுபடியாகும் ரெசிடென்ஸ் விசா மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட குறிப்பிட்ட பிரிவின் ஊழியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு அவர்கள் ஆகஸ்ட் 5 முதல் மீண்டும் அமீரகம் திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குடியிருப்பாளர்கள் அடையாள மற்றும் குடியுரிமைக்கான மத்திய ஆணையத்தின் (ICA) ஒப்புதல்களைப் பெற்று அமீரகம் திரும்பலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
அமீரக அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான WAM படி, குடியிருப்பாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றிருக்க வேண்டும் மற்றும் இரண்டாவது டோஸிலிருந்து 14 நாட்கள் கடந்துவிட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினால் இந்தியா மற்றும் இலங்கையில் தடுப்பூசி போட்டவர்கள் அமீரகம் திரும்பலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் ICA வெளியிட்டுள்ள புதிய ஒப்புதலுக்கான படிவத்தில் எட்டு தடுப்பூசிகளின் பட்டியலை ICA வழங்கியுள்ளது.
அவை ஸ்புட்னிக் V (Sputnik V), ஜான்சன் (ஜான்சன் அண்ட் ஜான்சன்) Janssen (Johnson and Johnson), மாடர்னா (Moderna), நோவாவாக்ஸ் (Novavax), ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனேகா (OxfordUni AstraZeneca), ஃபைசர் பயோஎன்டெக் (PfizerBioNTech), சினோஃபார்ம் (Sinopharm) மற்றும் சினோவாக் (கொரோனாவாக்) Sinovac (CoronaVac) ஆகியவை ஆகும்.
இதில் ஆக்ஸ்போர்டுனி அஸ்ட்ராஜெனேகா இந்தியாவில் போடப்படும் கோவிஷீல்டு தடுப்பூசி ஆகும்.
இவற்றில் சினோவாக், ஜான்சன் அண்ட் ஜான்சன், நோவோவாக்ஸ் போன்ற தடுப்பூசிகள் அமீரகத்தில் பயன்பாட்டில் இல்லை. இந்த தடுப்பூசிகளை வேறு நாடுகளில் மட்டுமே போட்டுக்கொள்ள முடியும்.
இந்த மாறுபட்ட தகவல்களால் இந்தியா, இலங்கையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட அமீரகம் திரும்ப இருக்கும் குடியிருப்பாளர்கள் மிகவும் குழப்பத்தில் உள்ளனர்.
எனவே இது குறித்த தெளிவான விளக்கத்தை விரைவில் அதிகாரிகள் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.