எமிரேட்ஸ் விமான நிறுவனத்தில் 3,500 காலி பணியிடங்கள்..!! தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!
துபாயை தளமாகக் கொண்டு இயங்கி வரும் விமான நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அடுத்த ஆறு மாதங்களில் 3500 ஊழியர்களை தங்கள் நிறுவனத்தில் பணியமர்த்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனமானது கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்ட உலகளாவிய பயண தடையால் தங்களின் பெரும்பாலான ஊழியர்களை பணி நீக்கம் செய்தும், நீண்ட கால விடுப்பும் அளித்திருந்தது. இந்த நிலையில், தற்போது விமான சேவை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருவதை தொடர்ந்து தங்கள் நிறுவனத்தில் 3,000 கேபின் குழு (cabin crew) மற்றும் 500 விமான நிலைய ஊழியர்களை (airport staffs) அதன் துபாய் மையத்தில் சேர்ப்பதற்கான உலகளாவிய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
இதன் மூலம் எமிரேட்ஸில் கேபின் குழுவினராகவோ அல்லது விமான நிலைய சர்வீஸ் ஏஜெண்டாகவோ எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் சேர விருப்பமுள்ள நபர்கள் வேலைக்காக விண்ணப்பிக்க மற்றும் வேலைத் தேவைகளைப் பற்றி அறிய www.emiratesgroupcareers.com என்ற இணையதளத்தைப் பார்வையிடுமாறும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விண்ணப்பதாரர்களை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியதன் மூலம் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தனது நெட்வொர்க்கில் உள்ள விமான பயண தொடர்புகளை படிப்படியாக மீட்டெடுத்து வருகிறது. எமிரேஸ் விமான நிறுவனம் தற்போது 120 க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு விமான சேவையை இயக்கி வருகிறது.
தற்போது செயல்பாட்டில் இருக்கும் நகரங்களுக்கு இடையேயான பயண சேவையானது கொரோனா தொற்றுநோய்க்கு முந்தைய சேவையை ஒப்பிடுகையில் 90 சதவிகித அளவை குறிப்பதாகவும், மேலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் அதன் மொத்த விமானங்களின் திறனில் 70 சதவீதத்தை மீட்டெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் விமான நிறுவனம் கூறியுள்ளது. இதில் கொரோனா நோய்த்தொற்றினால் நிறுத்திவைக்கப்பட்டுள்ள உலகின் மிக பெரிய பயணிகள் விமானமான A 380 விமானங்களை மீண்டும் சேவைக்கு கொண்டு வருவதும் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.