அனைத்து விமான டிக்கெட்டுகளுக்கும் 50 சதவீத தள்ளுபடியை அறிவித்த எத்திஹாட் ஏர்வேஸ்..!! எங்கே வாங்குவது..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான நிறுவனங்களில் ஒன்றான அபுதாபியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் எத்திஹாட் ஏர்வேஸ் விமான நிறுவனம் அதன் விமான பயண டிக்கெட்டிற்கான விலையில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது.
எத்திஹாட் ஏர்வேஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் செப்டம்பர் 16 அதாவது இன்று முதல் செப்டம்பர் 23 வரையிலான நாட்களில், துபாயின் மால் ஆஃப் தி எமிரேட்ஸில் அமைந்துள்ள ‘எத்திஹாட் பாப்-அப் ஸ்டாண்டில்’ வாங்கப்பட்ட அனைத்து விமான டிக்கெட்டுகளுக்கும் 50 சதவீத தள்ளுபடியை எத்திஹாட் ஏர்வேஸ் வழங்குவதாக தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பிராண்ட், மார்க்கெட்டிங் மற்றும் ஸ்பான்சர்ஷிப்பின் துணைத் தலைவர் அமினா தாஹர், “வெளிநாட்டிலிருந்து அபுதாபிக்கு வரும் தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்து பயணிகளுக்கும் தனிமைப்படுத்தல் தேவையை அரசாங்கம் நீக்குவதாக வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, பயணிகளை மீண்டும் அமீரகம் பயணிக்க ஊக்குவிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளோம். இதை முடிந்தவரை பலனளிக்கும் வகையில் பாப்-அப் ஸ்டாண்டில் முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து டிக்கெட்டுகளுக்கும் நம்பமுடியாத 50 சதவீத தள்ளுபடியை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று கூறியுள்ளார்.
மேலும் எத்திஹாட் ஸ்டாண்டிற்கு வருபவர்கள் இது தவிர அவர்களின் எதிர்கால பயண முன்பதிவுகளுக்கும் 25 சதவிகிதம் வரை பிரத்யேக தள்ளுபடிகளையும் பெற முடியும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த 25 சதவீத தள்ளுபடியானது எக்கனாமிக் கிளாஸ், பிசினெஸ் கிளாஸ் மற்றும் ஃபர்ஸ்ட் கிளாஸ் பிரிவில் டிசம்பர் 8, 2021 வரை பயணம் செய்ய முன்பதிவு செய்யப்படும் விமான டிக்கெட்டுகளுக்கும் பொருந்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
துபாயின் மால் ஆஃப் தி எமிரேட்ஸில் அமைந்துள்ள இந்த எத்திஹாட் பாப்-அப் ஸ்டாண்ட் வார நாட்களில் தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை வாடிக்கையாளர்களுக்காக திறந்திருக்கும் என்பதும், வார இறுதி நாட்களில் காலை 10 மணி முதல் நள்ளிரவு வரையிலும் திறந்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.